ஈரோடு, பிப். 16: ஈரோட்டில் நிர்வாண நிலையில் இளம்பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொடூரமான முறையில் கொலை செய்தது யார் என தெரியாமல் போலீசார் திணறி வருகின்றனர். ஈரோடு ரங்கம்பாளையம் ரிங் ரோடு ரயில்வே பாலம் அருகேயுள்ள காலி இடத்தில் கடந்த 10ம் தேதி, ஈரோடு பெருந்துறை சாலை வாய்க்கால் மேட்டை சேர்ந்த நர்மதா (25) என்ற பெண்ணை நிர்வாண நிலையில் தலையில் கல்லை போட்டு மர்ம நபர் கொலை செய்தார்.
இதுகுறித்து அவரது கணவர்கள் பெரியசாமி, சூர்யாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால், இதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. கொலையான பெண் யார் என தெரிந்தால் கொலைக்கான காரணம். கொலையாளிகள் யார் என்பது குறித்து எளிதில் கண்டுபிடித்து விடலாம் என்று போலீசார் எண்ணியிருந்தனர். ஆனால், நடைமுறையில் பெண்ணின் அடையாளம் தெரிந்து இருந்தும், அவரை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து வந்து கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தார்? என்ற விபரங்கள் தெரியாத நிலை உள்ளது.
கொலையாளிகளை கண்டுபிடிப்பது தொடர்பாக கடந்த 14ம் தேதி, ஈரோடு எஸ்.பி. சுஜாதா தலைமையில் க்ரைம் போலீசாருக்கான மீட்டிங் நடந்தது.கொலையாளிகளை கண்டுபிடிப்பதற்கான எவ்வித முன்னேற்றமும் இதுவரை தென்படவில்லை.
இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது: இறந்த பெண்ணிடம் மொபைல் போன் இல்லை. அதுபோல் சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் கொலையான பெண்ணின் நடமாட்டம் ஏதும் பதிவாகவில்லை.இது விசாரணை முறைக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும், இக்கொலையில் தொடர்புடைய மர்ம நபரை பிடிக்க அமைக்கப்பட்ட 5 தனிப்படை போலீசார், இரவு பகல் பாராமல் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
