ஈரோடு, பிப். 18: கடலூரில் இருந்து ஈரோட்டிற்கு ரயில் மூலம் 2 ஆயிரம் நெல் மூட்டைகள் வந்தன. ஈரோடு மாவட்ட பொது விநியோக திட்டத்தில் விநியோகிப்பதற்காக கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியில் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இதில், 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் சரக்கு ரயிலில் ஈரோட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த ரயில் நேற்று ஈரோடு ரயில்வே கூட்ஸ் செட்டிற்கு வந்தடைந்து.
இந்த நெல் மூட்டைகளை நூற்றுக்கணக்கான லாரிகளில் ஏற்றி நெல் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நெல் மூட்டைகள் நெல் அரவை முகவர்களிடம் கொடுத்து புழுங்கல் அரிசியாக மாற்றப்பட்டு மாவட்டத்தில் உள்ள பொது விநியோக திட்ட குடோன்களுக்கு அனுப்பி, ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
