புதுடெல்லி: தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட நடிகை பிரதியுஷா கடந்த 2002ல் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். இதில் காதலன் உயிர் பிழைத்த நிலையில் பிரதியுஷா ஹைதராபாத்தில் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கில் கடந்த 2004ம் ஆண்டு காதலன் சித்தார்த ரெட்டிக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இதனை இரண்டு ஆண்டுகளாக ஆந்திரா உயர்நீதிமன்றம் கடந்த 2011ம் ஆண்டு குறைத்திருந்தது.
இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக நடிகை பிரதியுஷா தாயார், தனது மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகவும், அதேப்போன்று நடிகையின் காதலனாகிய சித்தார்த ரெட்டி தனக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனைக்கு எதிராகவும் தனித்தனியாக இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ராஜேஷ் பிண்டல் மற்றும் மன்மோகன் அகிய இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வுநேற்று வழங்கி தீர்ப்பில்,” நடிகை பிரிதியுஷா தொடர்பான வழக்கில் தண்டனை பெற்ற சித்தார்த ரெட்டியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம். எனவே அவர் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இன்றை(நேற்று) நாளில் இருந்து நான்கு வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும்.
அதேநேரத்தில் பிரதியுஷாவின் தாய் சரோஜினி தேவி தாக்கல் செய்த மனுவில், தனது மகள் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாகவும், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். ஆனால், மருத்துவ ஆதாரங்களின்படி இது விஷம் அருந்தியதால் ஏற்பட்ட மரணம் என்பது உறுதியாகியுள்ளது.
அந்த புகார்களை உச்ச நீதிமன்றம் நிராகரிப்பதால் அவரது மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக பிரிதியுஷாவை தற்கொலைக்குத் தூண்டிய குற்றத்தை அடிப்படையாக கொண்டு சித்தார்த ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்கிறது’’ என்று கூறிய நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
