திருமலை: ஆந்திர மாநிலம் ஏலூரைச்சேர்ந்தவர் யேசுரத்னம். இவரது மனைவி ஷமந்தகமணி, மகள்கள் சுனிதா, ஷைலஜா(46), மகன் ஜெயராஜு. காவல்துறையில் ஏ.எஸ்.ஐயாக பணியாற்றி வந்த யேசுரத்னம் 17 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் அவரது மனைவி, 2 மகள்கள், மகன் ஆகியோர், குகட்பள்ளியின் ராமகிருஷ்ணா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகை வீட்டில் வசிக்கின்றனர். ஆனால் மகன், மகள்கள் யாருக்கும் திருமணமாகவில்லையாம்.
இந்நிலையில் ஷைலஜாவுக்கு கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டதாம். இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷைலஜா, கடந்த 13ம் தேதி இறந்தார். இதனால் அவரது குடும்பத்தினர், சடலத்தை வீட்டிற்கு கொண்டு வந்தனர். ஆனால் இறுதிச்சடங்கு செய்யாமல் ஒரு ப்ரீசர் பெட்டியில் வைத்திருந்தனர். மறுநாள் முதல் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்தனர்.
அங்கு சென்று பார்த்தபோது, ஷைலஜாவின் சடலத்திற்கு இறுதிச்சடங்கு செய்யாமல் குடும்பத்தினர் சடலம் அருகே இறந்த யேசுரத்னம் படத்தை வைத்து பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் கேட்டபோது இறந்த ஷைலஜா மீண்டும் உயிரோடு எழுந்து வருவார். அதற்காக பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து குகட்பள்ளி போலீசாருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வந்து விசாரித்தனர். அவர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் போலீசார், நீங்கள் இறுதிச்சடங்கை நடத்தவில்லை என்றால், உடலை மாநகராட்சி ஊழியர்களிடம் ஒப்படைப்போம் என எச்சரித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஷைலஜாவின் குடும்பத்தினர், உடலை ஆந்திராவில் உள்ள சொந்த கிராமத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்தனர். இதனால் அவர்களை சடலத்துடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.
