×

ரயில்வே பாதுகாப்பு திட்டங்களுக்கான நிதி காகித அளவில் மட்டுமே உள்ளது: ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

புதுடெல்லி: நாடு முழுவதிலும் பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அசானுதீன் அமானுல்லா மற்றும் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்,\\” ரயில்வே பாதுகாப்பு திட்டங்கள் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்தார். இதையடுத்து அதனை பரிசீலனை செய்த நீதிபதிகள் கடும் அதிருப்தியை தெரிவித்தனர்.

அதில்,\\”இந்த விவகாரத்தில் நீங்கள் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் என்ன திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்த எந்தவித தெளிவும் கிடையாது. நீதிமன்றத்தை குழப்பும் விதமாக உங்களது தரப்பின் அறிக்கை உள்ளது. நீதிமன்றத்தை முட்டாளாக்கும் நோக்கத்தில் உங்களது செயல்பாடுகள் இருக்கிறது. மேலும், பயணிகளின் பாதுகாப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. இது நீதிமன்றத்திற்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தும் காகித அளவில் மட்டுமே உள்ளது. செயலில் எதுவும் கிடையாது.

குறிப்பாக டெல்லி, பாட்னா உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. நடைமேடைகளுக்கு கூட செல்வது மிகவும் சிரமமாக உள்ளது. பயணிகள் பாதுகாப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தால் மட்டுமே ரயில்வேத்துறை வளரும். சாதாரண பெட்டிகளில் பயணிகளின் நிலை இன்னும் மோசமாக உள்ளது. அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். குறிப்பாக இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் இறுதி வாய்ப்பாக ஒரு மாதம் அவகாசம் தருகிறோம்.

இந்த இடைப்பட்ட காலத்தில் பயணிகள் பாதுகாப்புக்கு திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, எந்தெந்த திட்டங்களுக்கு செலவிடப்படுகிறது என்பது உட்பட அனைத்து விவரங்களும் அடங்கிய விரிவான விளக்கம் கொண்ட பிரமாணப் பத்திரத்தை ஒன்றிய அரசு தாக்கல் செய்ய வேண்டும். இல்லையெனில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஏப்ரல் 1ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags : Supreme Court ,Union Government ,New Delhi ,Asanuddin Amanullah ,Mahadevan ,
× RELATED கேரளாவில் தேர்தல் நெருங்கும்...