தை பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிப்பு

விருதுநகர்: ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலைக் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதோஷம், பௌர்ணமியை முன்னிட்டு சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல அனுமதி தரப்பட்ட நிலையில் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் சதுரகிரி கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். தைப்பூசம் திருநாளை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் கனமழை எச்சரிக்கையால் தை மாத பிரதோஷம், பெளர்ணமியை முன்னிட்டு பிப்ரவரி 3,4ஆம் தேதி பக்தர்கள் சதுரகிரி கோயிலுக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.

தைப்பூசம் திருநாளை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தை மாத பிரதோஷம், பெளர்ணமியை முன்னிட்டு பிப்ரவரி 3 முதல் பிப்ரவரி 6ஆம் தேதி வரைக்கும் பக்தர்கள் சதுரகிரி கோயிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட நாட்களில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேறிச் செல்ல அனுமதி வழங்கப்படும். மலைக் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, மாவட்ட நிர்வாகத்தின் நிபந்தனைகளை பக்தர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை பெய்தால் பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்திருந்தனர். இந்தநிலையில் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நாளை பிப்ரவரி 3 மற்றும் நாளை மறுநாள் பிப்ரவரி 4ஆம் தேதி பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மலை அடிவாரத்திற்கு பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். சதுரகிரி சுந்தரமகாலிங்கத்தை மலையேறி தரிசனம் செய்ய வேண்டும் என்று நினைத்த பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Related Stories: