ஒன்றிய அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறு வழக்கு; ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜர்!

லக்னோ: 2018ல் ஒன்றிய அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜரானார். உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜரானார். கடந்த 2018-ம் ஆண்டு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆட்சேபத்திற்குரிய கருத்துகளை பேசியதாக கூறி, பா.ஜ.க.வைச் சேர்ந்த விஜய் மிஸ்ரா என்பவர் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை சுல்தான்பூரில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த பிப்ரவரி 20-ம் தேதி அமேதியில் நடந்த பாரத் ஜோடோ நியாய யாத்திரையை தற்காலிகமாக நிறுத்திவிட்டு ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜரானார்.

அப்போது ராகுல் காந்திக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கு தொடர்பாக இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க ராகுல் காந்திக்கு சிறப்பு நீதிபதி சுபம் வர்மா உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ராகுல் காந்தி இன்று நேரில் ஆஜராகியுள்ளார். காலை 9 மணிக்கு லக்னோ விமான நிலையம் வந்த ராகுல் காந்தி, பின்னர் கார் மூலம் சுல்தான்பூர் நீதிமன்றத்தில் வந்தடைந்தார்.

 

The post ஒன்றிய அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறு வழக்கு; ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜர்! appeared first on Dinakaran.

Related Stories: