ஐபோன்களை தொடர்ந்து ஐபேட்களையும் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்ய ஃபாக்ஸ்கான் நிறுவனம் முடிவு

ஸ்ரீபெரும்புதூர்: ஐபோன்களை தொடர்ந்து ஐபேட்களையும் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்ய ஃபாக்ஸ்கான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. சென்னை ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள சுங்குவார்சத்திரத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் இயங்கி வருகிறது. ஆப்பிள் நிறுவனத்திற்குச் சொந்தமான ஐபோன்கள் இங்கு தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்குப் பல ஆயிரம் ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்கள். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் வருங்காலத்தில் ஐபேட்களையும் தயாரிக்க நிறுவனம் முடிவு செய்துள்ளது.

2 ஆண்டு காலத்தில் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையின் உற்பத்தி திறனை இரட்டிப்பாக்க ஃபாக்ஸ்கான் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஐபேட் உள்ளிட்ட ஆப்பிள் நிறுவனத்தின் இதர தயாரிப்புகளையும் தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசுடன் ஏற்கனவே ஆலோசிக்கப்பட்டுள்ளதாக ஃபாக்ஸ்கான் நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஐபேட் தயாரிக்கும் திட்டம் இருந்தாலும் மேக் மடிக்கணினிகளை உற்பத்தி செய்யும் திட்டம் இப்போதைக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். ஐபேட்கள் தயாரிக்கும் முடிவை அடுத்து ஃபாக்ஸ்கான் நிறுவுனத்தில் வேலை வாய்ப்பு கணிசமாக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

The post ஐபோன்களை தொடர்ந்து ஐபேட்களையும் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்ய ஃபாக்ஸ்கான் நிறுவனம் முடிவு appeared first on Dinakaran.

Related Stories: