முதலமைச்சர் உத்தரவை அடுத்து உயிரிழந்த ஓட்டுநர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி உதவியை வழங்கினார் அமைச்சர் சாமிநாதன்..!!


காங்கேயம் : முதலமைச்சர் அறிவிப்பை அடுத்து உயிரிழந்த ஓட்டுநர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி உதவியை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார். திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே சத்யா நகரை சேர்ந்தவர் சேமலையப்பன் (49). காங்கயம் சுமை தூக்குவோர் சங்கத்தில் உறுப்பினர். வெள்ளகோவிலில் உள்ள தனியார் பள்ளியில் வேன் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் மாலை பள்ளி குழந்தைகளை வீடுகளுக்கு அழைத்து செல்லும் வழியில், வெள்ளகோவில் பழைய போலீஸ் குடியிருப்பு அருகே சேமலையப்பனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. வேனில், 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்த நிலையில் வலியை பொருட்படுத்தாமல் சாலையோரம் பாதுகாப்பாக நிறுத்தினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பரிசோதனையில் சேமலையப்பன் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பரவியது.சேமலையப்பன் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். மேலும் பள்ளி குழந்தைகளை காப்பாற்றி தன்னுயிர் நீத்த வேன் ஓட்டுநர் சேமலையப்பன் குடும்பத்தினருக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவிட்டார். இந்நிலையில் இன்று காலை சேமலையப்பனின் பெற்றோர் சுப்பன், காவேரி ஆகியோரிடம் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். அவருடன் கலெக்டர் கிறிஸ்துராஜ், திமுக மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் ஆகியோர் உடனிருந்தனர்.

The post முதலமைச்சர் உத்தரவை அடுத்து உயிரிழந்த ஓட்டுநர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி உதவியை வழங்கினார் அமைச்சர் சாமிநாதன்..!! appeared first on Dinakaran.

Related Stories: