அவனியாபுரம்: ஜெர்மன் கடன் உதவியுடன் 2,200 பஸ்கள் வாங்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார். சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நேற்று அளித்த பேட்டி: கடந்த அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஏற்பட்ட குளறுபடிகளை சரி செய்ய வேண்டியுள்ளது. இது யார் மீதும் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. திமுக ஆட்சியில் பெண்கள் பஸ்களில் விரும்பி பயணம் செய்கிறார்கள். இதனால் பெண் பயணிகளின் எண்ணிக்கை 60 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஜெர்மன் நிதி உதவியுடன் 2,200 புதிய பஸ்கள் வாங்கப்பட உள்ளது. இதில் எலக்ட்ரிக் பஸ்கள் வாங்குவதன் மூலம் டீசல் செலவை மிச்சப்படுத்த வாய்ப்பு உள்ளது. அதிநவீன பஸ்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். ஊதிய உயர்வு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து கொரோனா முடிந்த பின் தொழிற்சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி முதல்வருடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.