தமிழில் என்.லிங்குசாமி இயக்கிய ‘தி வாரியர்’, வெங்கட் பிரபு இயக்கிய ‘கஸ்டடி’ ஆகிய படங்களில் நடித்துள்ள கிரித்தி ஷெட்டி, அடுத்து கார்த்தியுடன் ‘வா வாத்தியார்’, ரவி ேமாகனுடன் ‘ஜீனி’, பிரதீப் ரங்கநாதனுடன் ‘எல்ஐகே’ என்கிற ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். அவர் ‘சூப்பர் 30’ என்ற இந்தி படத்தில் சின்ன கேரக்டரில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், மீண்டும் அவர் இந்திக்கு செல்ல இருப்பதாகவும், மிலாப் மிலன் ஜாவேரி இயக்கத்தில் டைகர் ஷெராஃப்புடன் பாலிவுட் படத்தில் நடிப்பதாகவும் கூறப்பட்டது.
இதுபற்றி கிரித்தி ஷெட்டி கூறுகையில், ‘நான் மும்பையில் பிறந்து வளர்ந்தவள் என்பதால், இந்தியில் நடிப்பது எனக்கு சிறப்பாக இருக்கும் என்று நினைத்தேன். தமிழ், தெலுங்கு, மலையாளம் போல் இந்தியில் பேச கற்றுக்கொண்டு நடிக்க வேண்டியது இல்லை. இந்தி தெரியும் என்பதால் வசனங்களின் அர்த்தம் புரியும். இந்தியில் எனக்கு சில வாய்ப்புகள் வந்தது. கால்ஷீட் பிரச்னை காரணமாக ஒப்பந்தமாகவில்லை. பாலிவுட்டில் பணியாற்றும் முறை மிகவும் வித்தியாசமானது. அவர்கள் அனைத்து படப்பிடிப்பு ஷெட்யூலையும் ஒன்றாகவே திட்டமிடுவார்கள். தென்னிந்திய சினிமாவில் பிரித்து, பிரித்து நடத்துவார்கள். இதனால், இந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பை நான் ஏற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது’ என்றார்.
