கவுதம் வாசுதேவ் மேனன், அபிநயாவின் கார் டிரைவர் சமுத்திரக்கனி, இட்லி கடை நடத்தும் மனைவி லட்சுமிப்பிரியா சந்திரமவுலி மற்றும் மகனுடன் எளிமையாக வாழ்ந்து வருகிறார். ஒரு பயணத்தில் சமுத்திரக்கனியிடம் பேசும் கார்த்திக் குமார், ‘பணக்காரன் ஆகணும்னா, முதல்ல பணக்காரனா வாழ்ந்து பழகணும். அதுக்கு நிறைய கடன் வாங்கணும்’ என்று சொல்கிறார். அதை வேதவாக்காக எடுத்துக்கொண்ட சமுத்திரக்கனி, அதிக கடன் வாங்கி, ஆடம்பர வாழ்க்கைக்கு அடிமையாகிறார்.
வருமானத்தை மீறிய செலவு அவரையும், குடும்பத்தையும் எப்படி சீரழிக்கிறது? அதிலிருந்து மீள முடிந்ததா என்பது மீதி கதை. நேர்மையாக இருந்து, பிறகு பேராசையால் தடம் மாறும் கேரக்டரில் சமுத்திரக்கனி வாழ்ந்திருக்கிறார். அவருக்கும், மகனுக்குமான பாசம் யதார்த்தம். உண்டியலை உடைத்துவிட்டு கலங்கும் லட்சுமிப்பிரியா சந்திரமவுலி, அவரது மகன் பொருத்தமான தேர்வு. கவுதம் வாசுதேவ் மேனன், அபிநயா ஜோடியை மறக்க முடியாது.
கார்த்திக் குமார், படவா கோபி, மதுமிதா, அர்ஜூனன், கரண் சக்ரவர்த்தி, முல்லை கோதண்டம், ஹரிதா பராகோட் ஆகியோரும் கவனத்தை ஈர்த்துள்ளனர். யுவராஜ் தக்ஷன் ஒளிப்பதிவு, கடற்கரை பகுதியை குளுமையாக பதிவு செய்துள்ளது. மியூசிக்லவுட் ஸ்டுடியோ அண்ட் டெக்னாலஜி இசை அமைத்துள்ளது. எழுதி இயக்கியுள்ள ராம் சக்ரி, நிம்மதியான வாழ்க்கை எது என்று பாடம் நடத்தியுள்ளார். படத்தின் நீளத்தை குறைத்து, திரைக்கதையை விறுவிறுப்பாக நகர்த்தியிருக்க வேண்டும்.
