காரமடை: காரமடை அருகே சிறுத்தை கடித்து ஆடு பலியானது. 5 ஆடுகள் படுகாயமடைந்தன. கோவை காரமடை அடுத்த வெள்ளியங்காடு சுண்டக்கரை புதூரை சேர்ந்தவர் செந்தில்குமார் (50). இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் வாழை, பருத்தி உள்ளிட்டவைகளை சாகுபடி செய்து வருகிறார். வனப்பகுதியில் இருந்து 2 கிலோ மீட்டருக்குள் இந்த தோட்டம் அமைந்துள்ளது. இவரது தோட்டத்தில் ராமசாமி (65) என்பவர் 50-க்கும் மேற்பட்ட ஆடுகளை பட்டி போட்டு அடைத்து வளர்த்து வருகிறார்.
நேற்றிரவு வழக்கம் போல மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை மீண்டும் பட்டியில் அடைத்து விட்டு ராமசாமி வீட்டிற்கு சென்றுள்ளார். இன்று அதிகாலை தோட்டத்திற்கு சென்று பட்டியை பார்த்தபோது ஒரு ஆடு கழுத்தில் சிறுத்தை கடித்த காயத்துடன் இறந்த நிலையில் கிடந்துள்ளது. மேலும், 5க்கும் மேற்பட்ட ஆடுகள் ரத்த வெள்ளத்தில் படுகாயத்துடன் கிடந்தன. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ராமசாமி, வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆட்டுப்பட்டியை சுற்றிலும் சிறுத்தையின் கால் தடம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் கால்தடம் சிறுத்தையினுடையது தான் என்பதை உறுதிப்படுத்தினர். நள்ளிரவில் பட்டிக்குள் சிறுத்தை புகுந்து ஆடுகளை கடித்து குதறியது தெரிய வந்தது.
கடந்த சில மாதங்களாகவே இப்பகுதிகளில் சிறுத்தையின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்பவும், வளர்க்கவும் விவசாயிகள் அச்சப்படுகின்றனர். எனவே, காரமடை வனத்துறையினர் இப்பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post காரமடை அருகே பட்டிக்குள் புகுந்து சிறுத்தை கடித்து ஆடு பலி 5 ஆடுகள் படுகாயம் appeared first on Dinakaran.
