இழப்பை தவிர்க்க கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி

கரூர், ஜூலை. 19: கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்படுவதாக கலெக்டர்தெரிவித்துள்ளார். இது குறித்து கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கருர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் இணைந்து ஜூலை 2ம்தேதி முதல் 22ம்தேதி வரை 21 நாட்களுக்கு அனைத்து பசு மற்றும் எருமையினங்களுக்கு இலவசமாக தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கோமாரி நோய் தடுப்பூசி 7வது சுற்று போடும் பணி நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து, ஜூலை 23ம்தேதி முதல் 31ம்தேதி வரை விடுபட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி பணி மேற்கொள்ளப்படவுள்ளது. கோமாரி நோய் இரட்டை குளம்பின கால்நடைகளை தாக்கி காய்ச்சல் மற்றும் கொப்பளங்கள் ஏற்படுத்தும் நச்சுயிரி தொற்று நோயாகும். பண்ணையில் சுகாதாரமற்ற பராமரிப்பு மற்றும் பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், உமிழ்நீர், சாணம், பால் மற்றும் பண்ணை கழிவுகள் முலம் இநத நோய் எளிதில் பரவுகிறது.

கோமாரி நோயாலி மாடுகளில் சினை பிடிக்காமல் போவது, பால் உற்பத்தி குறைதல், தோல் மற்றும் தோல் பொருட்களின் மதிப்பிறக்கம், எருதுகளின் வேலைத்திறன் பாதிப்பு மற்றும் கன்றுகளில் அதிக இறப்பு ஆகியவை ஏற்பட்டு கால்நடை வளர்ப்போர்களுக்கு பெரும் பொருளாதார இழப்பு நேரிடுகிறது.இந்த கொடிய நோயை தடுக்கும் வகையில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீர் 6 மாதங்களுக்கு ஒரு முறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பசு மற்றும் எருமையினங்களுக்கு இலவசமாக போடப்பட்டு வருகிறது.கரூர் மாவட்டத்தில் ஜூலை 2 முதல் 27 வரை அங்கீகரிக்கப்பட்ட செயல் திட்டத்தின் கீழ் கால்நடை நிலையங்களின் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் 75 குழுக்கள் மூலம் 4 மாத வயதுக்கு மேற்பட்ட அனைத்து பசு மற்றும் எருமையினங்களுக்கு தடுப்பூசி பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும், இது குறித்து முன்கூட்டியே தக்க விளம்பரம் செய்து தடுப்பூசி பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, விவசாய பெருமக்கள் தங்கள் பகுதிகளில் தடுப்பூசி போடப்படும் நாளில் தவறாது கால்நடைகளை கொண்டு வந்து இலவசமாக தடுப்பூசி போட்டு பயன்பெறலாம்.

The post இழப்பை தவிர்க்க கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி appeared first on Dinakaran.

Related Stories: