மெரினா கடற்கரையில் பாலியல் தொந்தரவு கொடுத்த ஆதரவற்றவர் அடித்து கொலை: திருநங்கை, ஆண் நண்பருடன் கைது

சென்னை, ஜூன் 17: மெரினா கடற்கரையில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர். அப்போது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு பின்புறம் உள்ள கடற்கரை பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ரத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார். இதை பார்த்த பொதுமக்கள் உடனே முகத்தில் தண்ணீர் தெளித்து அவரை எழுப்பி விசாரித்த போது, தனது பெயர் வெங்கடேஷ் என்றும், தன்னை 2 பேர் தாக்கியதாகவும் கூறிவிட்டு மயங்கி விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனே காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர்.

அதன்படி, மெரினா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, காயங்களுடன் மயங்கி கிடந்தவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, அந்த நபர் வரும் வழியிலேயே இறந்தது தெரியவந்தது. இதையடுத்து மெரினா போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், இறந்தவர் பெயர் வெங்கடேஷ் (50) என்பதும், இவர் மெரினா பகுதியில் கடந்த ஒரு மாதமாக ஆதரவு இன்றி பிச்சைக்காரர் போல் சுற்றி வந்தது தெரியவந்தது. மேலும், வெங்கடேஷ் நேற்று முன்தினம் மெரினா கடற்கரையில் அருந்ததி என்ற திருநங்கையை உல்லாசத்திற்கு அழைத்து தொந்தரவு செய்ததாகவும், அதற்கு திருநங்கை வராததால் அவரை ஆபாசமாக பேசி தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த திருநங்கை அருந்ததி (19) ராயப்பேட்டையில் உள்ள தனது ஆண் நண்பரான ராகேஷ்குமார் (25) என்பவரை அழைத்து வந்து வெங்கடேஷை கழுத்தை நெரித்தும், தலையில் பலமாக தாக்கி விட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் சிசிடிவி பதிவுகளின்படி திருநங்கை அருந்ததி மற்றும் ராகேஷ்குமாரை நேற்று அதிகாலை கைது செய்தனர். அவர்களிடம் கொலை தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மெரினாவில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post மெரினா கடற்கரையில் பாலியல் தொந்தரவு கொடுத்த ஆதரவற்றவர் அடித்து கொலை: திருநங்கை, ஆண் நண்பருடன் கைது appeared first on Dinakaran.

Related Stories: