துரைப்பாக்கம்: கழிவுநீர் குழாய் உடைப்பு காரணமாக பெருங்குடி ராஜிவ்காந்தி சாலையில் திடீர் ராட்சத பள்ளம் ஏற்பட்டது. சென்னை ராஜிவ்காந்தி சாலையில் ஏராளமான ஐ.டி நிறுவனங்கள், கேளிக்கை விடுதிகள், பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் உள்ளதால் எப்போதும் போக்குவரத்து மிகுந்து காணப்படும். இந்த சாலையில் அவ்வப்போது திடீர் ராட்சத பள்ளங்கள் ஏற்படுவதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சமீபத்தில் தரமணி டைடல் பார்க் அருகே ராஜிவ் காந்தி சாலையில் ஏற்பட்ட ராட்சத பள்ளத்தில் கார் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெருங்குடி மாநகராட்சி சாலை எதிர்புறம் செல்லும் சர்வீஸ் சாலை பகுதியில் திடீரென ராட்சத பள்ளம் ஏற்பட்டது. இதனால் அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
சர்வீஸ் சாலையில் பதிக்கப்பட்ட கழிவுநீர் குழாய் உடைப்பு காரணமாக, அங்கு ராட்சத பள்ளம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, சர்வீஸ் சாலையில் யாரும் செல்லாதபடி தடுப்பு வேலி அமைத்து, சென்னை பெருநகர குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் கழிவுநீர் குழாய் மற்றும் ராட்சத பள்ளத்தை சீரமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
The post ராஜிவ்காந்தி சாலையில் திடீர் ராட்சத பள்ளம் appeared first on Dinakaran.
