ஊட்டி : ஊட்டியில் ரோஜா பூங்காவில் பல வண்ண வண்ண ரோஜா மலர்கள் பூத்துக்குலுங்குவது பயணிகளை கவர்ந்து வருகிறது. நீலகிரி மாவட்டம், ஊட்டி விஜயநகரம் பகுதியில் ரோஜா பூங்கா அமைந்துள்ளது. இங்கு 1500க்கும் மேற்பட்ட ரகங்களில் சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஜா செடிகள் உள்ளன.
மேலும் இந்த ரோஜா பூங்காவில் பாரம்பரிய ரோஜாக்களுக்கு என தனியாக இடம் உள்ளது. பாரம்பரிய ரோஜா பூங்காவில் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாரம்பரியம்மிக்க ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை ஊட்டி வரக் கூடிய சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்வார்கள். தொடர்ந்து உரமிட்டு பராமரித்தாலும், அவ்வப்போது பெய்த மழை காரணமாகவும் செடிகளில் வண்ண வண்ண ரோஜா மலர்கள் பூத்துக்குலுங்கின.
இந்நிலையில் கடந்த மாத இறுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக ரோஜா பூங்காவில் பூத்திருந்த வண்ண வண்ண மலர்கள் உதிர்ந்தன. மேலும் ரோஜா மொட்டுகள் தொடர் மழை காரணமாக அழுகின.
இதனால் பாத்திகளில் உள்ள ரோஜா செடிகளில் மலர்கள் குறைந்து போய் காட்சியளித்தது. இந்த சூழலில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மழையின்றி வெயிலுடன் கூடிய காலநிலை நிலவியது. இதனால் மீண்டும் ரோஜா பூங்காவில் வண்ண வண்ண மலர்கள் பூத்துள்ளன. இவற்றை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து வருகின்றனர்.
The post ஊட்டி ரோஜா பூங்காவில் மலர்ந்த வண்ண வண்ண ரோஜா பூக்கள் appeared first on Dinakaran.