ராயக்கோட்டை, ஜூன் 12: ராயக்கோட்டையில் மழையால் சேறும், சகதியுமாக ராயக்கோட்டை பஸ் ஸ்டாண்ட் காணப்படுகிறது. இதனால் பயணிகள் சிரமமடைகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையில் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வருகிறது. மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து செல்கிறது. ராயக்கோட்டை பஸ் ஸ்டாண்டில் தரை முழுவதும் சிமெண்ட் மற்றும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறி உள்ளது. இங்கு மழை பெய்தால் குழிகளில் தண்ணீர் நிரம்பி குளம் போல் காட்சியளிக்கிறது. இந்நிலையில், கடந்த வாரம் பெய்த மழையினால் குழிகளில் தண்ணீர் இருந்ததை மூட சிமெண்ட் ஜல்லிக்கற்களுக்கு பதிலாக மண்ணை கொட்டி ஊராட்சி நிர்வாகம் மூடியது. இந்நிலையில், நேற்று காலை முதலே அதிகளவில் மழை பெய்ததது. இதில் பஸ் ஸ்டாண்டில் குழிகளில் மூடிய மண் முழுவதும் சேறாக மாறியது. பஸ்கள் மற்றும் பல்வேறு வாகனங்கள் வந்து சென்றதால், பயணிகளின் ஆடைகளில் சேறு பட்டு தெறிக்குமோ என்று பயந்தபடி வருகின்றனர். எனவே, பஸ் ஸ்டாண்டில் உள்ள குழிகளை மூடி, தார் சாலை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post சேறும், சகதியுமாக மாறிய பஸ் ஸ்டாண்ட் appeared first on Dinakaran.