* தொடர்ந்து செயல்படுவார்கள் என்று அன்புமணி அறிவிப்பு, யார் பேச்சை கேட்பது என்று தெரியாமல் பாமகவினர் குழப்பம்
சென்னை: பாமகவில் தந்தை, மகன் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. சென்னையில் கட்சி நிர்வாகிகளுடன் அன்புமணி ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்திற்கு பெரும்பான்மையான நிர்வாகிகள் வந்தனர். இதனால் ராமதாஸ் கடும் அதிருப்தியும், அதிர்ச்சியும் அடைந்துள்ளார். அதே நேரத்தில் அன்புமணிக்கு ஆதரவு அளிக்கும் நிர்வாகிகளை நீக்கி ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டு வருகிறார். நீக்கிய நிர்வாகிகள் அதே பதவியில் தொடர்வார்கள் என்று அன்புமணி அறிவித்து வருவதால் பாமகவில் குழப்பம் நிலை நீடித்துள்ளது.
பாமக நிறுவனர் ராமதாசுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையே சமீபகாலமாக கடும் கருத்து மோதல் ஏற்பட்டது. இந்த சூழலில் கடந்த மாதம் 10ம் தேதி அன்புமணி ராமதாஸின் தலைவர் பதவியை பறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பரபரப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அன்புமணி ராமதாஸ் செயல் தலைவராக தொடர்வார் என்றும் அறிவித்தார். அதேநேரம், கட்சியின் சட்ட விதிகள்படி நானே தலைவராக தொடர்வேன் என அன்புமணி ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதனால் பாமகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் தர்மபுரி மாவட்டம் கடத்தூரில் கடந்த 24ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், ‘கட்சி பதவியில் இருந்து நான் ஏன் மாற்றப்பட்டேன். அப்படி நான் என்ன தவறு செய்தேன்’ என மன வேதனையுடன் பேசியிருந்தார். இந்த விவகாரம் முடிவுக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அன்புமணியின் இந்த பேச்சால் தந்தை, மகன் இடையிலான மோதல் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியது.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் நேற்று முன்தினம் பேட்டியளித்த பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குறிப்பாக 35 வயதிலேயே அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது தவறு என்றும் கூறி இருக்கிறார். பாஜவுடன் கூட்டணி அமைப்பதற்கு காரணம் அன்புமணி, சவுமியா தான். இருவரும் என் கால்களை பிடித்து கண்ணீர் விட்டு அழுதனர். பாஜ கூட்டணிக்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றால், தற்கொலை செய்து கொள்வேன் என்று அன்புமணி மிரட்டினார். அதனால் ஒப்புக் கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன் என்று ராமதாஸ் தெரிவித்தார்.
தேவை என்றால் பொதுக்குழுவை கூட்டி பாமகவில் இருந்து அன்புமணியை நீக்குவேன் என்றும் கூறினார். அன்புமணி-ராமதாஸ் இடையிலான மோதல் உச்சத்தில் இருப்பதால் பாமக உடைய அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதினர். ராமதாஸின் இந்த பரபரப்பு குற்றச்சாட்டை அடுத்து கட்சி நிர்வாகிகள் யாரும் தன்னை சந்திக்க வரவேண்டாம் என அன்புமணி நேற்று முன்தினம் திடீரென வேண்டுகோள் விடுத்தார். அதே நேரத்தில் தனது தந்தை கூறிய எந்த குற்றச்சாட்டுக்கும் அவர் எந்த விளக்கமும் இது வரை அளிக்கவில்லை.
இந்த நிலையில் பனையூரில் உள்ள இல்லத்தில் நேற்று அன்புமணி திடீர் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில் வழக்கறிஞர் பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர். அப்போது அடுத்தக்கட்டமாக என்ன மாதிரியான நடவடிக்கையில் ஈடுபடுவது என்பது குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து நேற்று பிற்பகல் அன்புமணி சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள மகாராஜா திருமண மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். முதல் கட்டமாக 23 மாவட்டச் செயலாளர் ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதில் 22 மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
முதல் கட்டமாக நேற்று காலை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய ஆறு மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாலையில் இரண்டாம் கட்டமாக கடலூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய ஐந்து மாவட்டங்கள் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பெண் நிர்வாகிகளும் அதிக அளவில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் வழக்கறிஞர் பாலு, பாமக பொருளாளர் திலகபாமா, மயிலம் சிவக்குமார் எம்எல்ஏ உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்ற பாமக நிர்வாகிகள் அனைவரும் சேர்ந்து பாமக தலைவர் அன்புமணி என்று கோஷம் எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அன்புமணி நிர்வாகிகளை அமர வைத்து, பாமகவில் புதிதாக இணைந்தவர்களுக்கு அடையாள அட்டையை வழங்கினார். அவர்களுடன் அன்புமணி தீவிர ஆலோசனை நடத்தினார். மாவட்ட நிர்வாகிகள் மட்டுமின்றி மற்ற நிர்வாகிகளும் கூட்டத்திற்கு வரத் தொடங்கினர். இதனால் திண்டிவனத்தில் உள்ள தைலாபுரம் தோட்டம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. இதனைக் காணும் போது பெரும்பாலான நிர்வாகிகள் அன்புமணிக்கு ஆதரவாக உள்ளதாக கூறப்படுகிறது.
அன்புமணிக்கு ஆதரவு பெருகி வருவது ராமதாசுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரதில் அன்புமணிக்கு ஆதரவு தெரிவிக்கும் நிர்வாகிகளை நீக்கி விட்டு புதிய நிர்வாகிகளை நியமிக்கும் படலத்தில் ராமதாஸ் இறங்கியுள்ளார். தந்தை, மகனின் உச்சக்கட்ட மோதல் பாமகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிர்வாகிகள் நீக்கம்- சேர்ப்பு: அன்புமணி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் திலகபாமாவை கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து நீக்கம் செய்து கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நேற்று அதிரடியாக உத்தரவிட்டார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாமக மாநில பொருளாளராக சையத் மன்சூர் உசேன் இன்று முதல் நியமனம் செய்யப்படுகிறார். எனவே இவருக்கு கட்சியின் பொறுப்பாளர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க அறிவுறுத்தப்படுகிறார்கள். புதிய பொருளாளர் சையத் மன்சூர் உசேன் திருப்பூரை சேர்ந்தவர் ஆவார். இந்த நியமன அறிவிப்பின் நகல்கள் பாமக செயல் தலைவர் அன்புமணி, கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
பாமக பொருளாளராக இருந்த திலகபாமாவை நீக்கி ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்ட அடுத்த நொடியே பாமக பொருளாளராக திலகபாமா தொடர்வார் என்று அன்புமணி அறிவித்தார். இதுகுறித்து அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், ‘‘பாமக பொருளாளராக பொதுக்குழுவால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட திலகபாமா அப்பொறுப்பில் தொடர்வார் என்று அறிவிக்கப்படுகிறது. பாமகவின் அனைத்து நிலை நிர்வாகிகளும் அவருக்கு தொடர்ந்து முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும் விழுப்புரம் வடக்கு மாவட்ட பாமக செயலாளராக பதவி வகித்து வந்த மயிலம் சிவக்குமார் எம்எல்ஏவை பதவியில் இருந்து நீக்கி ராமதாஸ் அறிவித்தார். புதிய மாவட்ட செயலாளராக புகழேந்தி செயல்படுவார் என்றும் அவர் அறிவித்தார். இந்த நிலையில் அன்புமணி மயிலம் சிவக்குமார் எம்எல்ஏ மாவட்ட செயலாளராக செயல்படுவார் என்று அறிவித்தார். மேலும் சோழிங்கநல்லூரில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மயிலம் சிவக்குமாரை அழைத்து இவர் மாவட்ட செயலாளராக தொடர்வார் என்று அன்புமணி அறிவித்தார்.
தந்தை கட்சி நிர்வாகிகளை நீக்கி புதிய நிர்வாகிகளை நியமிப்பதும். அதற்கு மாறாக மகன் அன்புமணி நீக்கப்பட்ட அதே பதவியில் தொடர்வார்கள் என்று அறிவித்து வருவதும் பாமகவினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. யாரை நிர்வாகியாக ஏற்பது என்று தெரியாமல் விழிபிதுங்கி வருகின்றனர்.
* தைலாபுரத்தில் நேற்று முன்தினம் பேட்டி அளித்த பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
* ராமதாசின் பரபரப்பு குற்றச்சாட்டை அடுத்து கட்சி நிர்வாகிகள் யாரும் தன்னை சந்திக்க வரவேண்டாம் என அன்புமணி நேற்று முன்தினம் திடீரென வேண்டுகோள் விடுத்தார்.
The post தந்தை, மகன் மோதல் உச்சக்கட்டம் சென்னையில் அன்புமணி போட்டி கூட்டம்: கூட்டத்தில் பங்கேற்ற பொருளாளர், எம்எல்ஏவை அதிரடியாக நீக்கிய ராமதாஸ் appeared first on Dinakaran.