தர்மபுரி : தர்மபுரி நகரில் அதிரடி சோதனை நடத்திய உணவு பாதுகாப்பு துறையினர், ஓட்டலில் உணவு சமைக்க வைத்திருந்த எலி கடித்த 25 கிலோ தக்காளியை பறிமுதல் செய்து அழித்தனர். தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் உத்தரவின் பேரில், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மருத்துவர் கைலாஷ்குமார் தலைமையில், ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால், சரண், அருண் உள்ளிட்ட குழுவினர், தர்மபுரி பஸ் நிலையம் பகுதி, நான்கு ரோடு, நாச்சியப்பகவுண்டர் தெரு, பென்னாகரம் ரோடு, சோகத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சிப்ஸ் தயாரிக்கும் நிறுவனங்கள், மளிகை கடைகள், பேக்கரி மற்றும் டீக்கடைகள், ஓட்டல்கள், பெட்டிக்கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது, பஸ் நிலையத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில், உணவு சமைக்க வைத்திருந்த அழுகிய தக்காளி, எலி கடித்த தக்காளி என சுமார் 25 கிலோ தக்காளியை பறிமுதல் செய்து அப்புறப்படுத்தினர். மேலும், பஸ் நிலையத்தில் டீக்கடை, பென்னாகரம் ரோடு மேம்பாலம் அருகில் பேக்கரி ஆகியவற்றில் பயன்பாட்டுக்கு வைத்திருந்த 4 கிலோ கலப்பட தேயிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்யப்பட்டது.
நாச்சியப்ப கவுண்டர் தெருவில் உள்ள பாஸ்ட்புட் கடையில், செயற்கை நிறம் ஏற்றப்பட்ட கோழி இறைச்சி 2 கிலோ, செயற்கை நிறமூட்டி டப்பிகள், அதே வீதியில் ஓட்டல் ஒன்றில் சமைத்த இறைச்சி ஒரு கிலோவை குளிர்பதன பெட்டியில் வைத்திருந்ததை பறிமுதல் செய்து அழித்தனர்.
புறநகர் பஸ் நிலையத்தில் உள்ள 2 கடையில் காலாவதியான குளிர்பானங்கள், உரிய விபரங்கள் அச்சிடாத தின்பண்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. சில கடைகளில் இருந்து பிளாஸ்டிக் கேரிபேக், பிளாஸ்டிக் கப்புகள் 4 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. உணவு பாதுகாப்பு விதிகள் பின்பற்றாத 5 கடைகளின் உரிமையாளர்களுக்கு தலா ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது.
The post தர்மபுரியில் ஓட்டலில் திடீர் ஆய்வு எலி கடித்த தக்காளி பழங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.