வளசரவாக்கம், மே 29: வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை திருமங்கலம் திருவள்ளூவர் குடியிருப்பை சேர்ந்தவர் ஹரிஹரன்(70), ஓய்வுப்பெற்ற அரசு ஊழியர். இவர் தனது மகனை பார்க்க குடும்பத்துடன் வேலூர் மாவட்டத்திற்கு கடந்த 24ம் தேதி சென்றுவிட்டு நேற்று முன்தினம் சென்னைக்கு வந்தனர். அப்போது வீட்டுக்கதவில் இருந்த பூட்டு உடைந்து கிடப்பதைக் கண்டு உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது, பீரோவின் லாக்கர் உடைக்கப்பட்டு 10 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடுத்துச் சென்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி வீடியோ பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், வழக்கு பதிந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
The post வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகைகள் கொள்ளை appeared first on Dinakaran.