சென்னை: மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.596.13 கோடி செலவில் 13 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 2 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பாக்வளைகுடா பகுதி மீனவர் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கான சிறப்புத் திட்டங்களையும், மகளிர் கூட்டுக் குழுக்களுக்கு நுண்கடன் வழங்கும் “அலைகள்” திட்டத்தையும் தொடங்கி வைத்து, 2,290 மீனவ பயனாளி பெருமக்களுக்கு ரூ.10.67 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் சென்னை மாவட்டம், திருவொற்றியூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 272 கோடியே 70 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள திருவொற்றியூர் புதிய சூரை மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட 426 கோடியே 13 இலட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடித் துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள் மற்றும் மீன் விதைப் பண்ணை என 13 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, இராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் மற்றும் ரோச்மா நகர் மீனவ கிராமங்களில் மொத்தம் 170 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மீன் இறங்குதளங்களை மேம்படுத்தும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வள கூட்டுறவு இணையத்தின் மூலம் மகளிர் கூட்டுக் குழுக்களுக்கு நுண்கடன் வழங்கும் அலைகள் திட்டத்தை தொடங்கி வைத்து, 2,290 மீனவ பயனாளி பெருமக்களுக்கு 10 கோடியே 67 இலட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மீன்வளத்தை பாதுகாத்தல், நிலைக்கத்தக்க மீன்பிடிப்பு, மீன் வளர்ப்பு நடைமுறைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றின் மூலம் மீன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்தல், மீன்பிடி படகுகளைப் பாதுகாப்பாக நிறுத்துவதற்கும், மீன்பிடி இடத்திலிருந்து அதன் நுகர்வு வரை சுகாதாரமான முறையில் கையாளப்படுவதை உறுதி செய்வதற்கும் மீன்பிடித் துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள், கரையோர வசதிகள், மீன் சந்தைகள் போன்ற நவீன உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மீன்பிடி தடைகாலங்களில் மீனவர்களுக்கு நிதியுதவி, மீன்பிடி படகுகளுக்கு வரிவிலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் வழங்குதல், பாரம்பரிய மீன்பிடி கலன்களுக்கு மண்ணெண்ணெய் மானிய விலையில் வழங்குதல், புதிய சூரை மீன்பிடி தூண்டில் மற்றும் செவுள் வலை விசைப்படகுகளை வாங்கிட மீனவர்களுக்கு 50 விழுக்காடு மானியம் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை மீனவ மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடவும், சமூக பாதுகாப்பினை உறுதி செய்திடவும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
திருவொற்றியூரில் அமைக்கப்பட்டுள்ள புதிய சூரை மீன்பிடி துறைமுகம்
சென்னை மாவட்டம், திருவொற்றியூரில் 272 கோடியே 70 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய சூரை மீன்பிடி துறைமுகத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். இம்மீன்பிடித் துறைமுகம் இந்தியாவிலேயே முதன் முதலாக சூரை மீன் பிடிப்பிற்கென பிரத்தியேகமாக கட்டப்பட்டதாகும். இத்துறைமுகத்தில், தெற்கு மற்றும் வடக்கு அலை தடுப்புச் சுவர்கள், படகு அணையும் சுவர், படகு அணையும் தளம், மீன் ஏலக்கூடங்கள், மீன் வலைப்பின்னும் கூடம், நிர்வாகக் கட்டடம், மீனவர் தங்கும் அறை, வானொலித் தகவல் தொடர்பு மையம், உணவகம், வலை பாதுகாப்பு கூடம், சுகாதார வளாகம், மீனவர் ஓய்வு அறை, இழுவை அறை, படகு பழுது பார்க்கும் இடம், மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி, மழைநீர் வடிகால் கொண்ட சாலை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், மீனவர்கள் ஆழ்கடலில் இருந்து சுகாதாரமான முறையில் தாங்கள் பிடித்து வரும் சூரை மீன்களை தரம் குறையாமல் உடனடியாக ஏற்றுமதியாளர்களுக்கு விற்பனை செய்து, கூடுதல் விலையை பெற்றிட இயலும். இதனால் மீனவர்களின் பொருளாதார நிலை உயர வழிவகுக்கும். இம்மீன்பிடித் துறைமுகம் ஆண்டிற்கு சுமார் 70,000 டன்கள் அளவிற்கு மீன்களை கையாளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இம்மீன்பிடித் துறைமுகத்தினை சுற்றியுள்ள 12 மீனவ கிராமங்களைச் சார்ந்த சுமார் 6,250 மீனவர்கள் மற்றும் மீன்பிடிப்பு சார்ந்த தொழிலில் உள்ளவர்கள் நேரடியாக பயன் பெறுவர்.
புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள், மீன் இறங்குதளங்கள், மற்றும் மேம்படுத்தப்பட்ட மீன் விதைப் பண்ணை திறந்து வைத்தல்
இராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூர் மீனவ கிராமத்தில் 20 கோடி ரூபாய் செலவில் குளிர்காப்பு வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகம், தூத்துக்குடி மாவட்டத்தில் 10 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம், திருவள்ளூர் மாவட்டம், சுண்ணாம்புகுளம் மீனவ கிராமத்தில் 8 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மீன் இறங்குதளம், விழுப்புரம் மாவட்டம், புதுகுப்பம் மற்றும் அனிச்சங்குப்பம் மீனவ கிராமங்களிலும் முதலியார் குப்பம் மற்றும் செட்டிநகர் மீனவ கிராமங்களிலும் தலா 7 கோடி ரூபாய் செலவில் புதியதாக கட்டப்பட்டுள்ள 2 மீன் இறங்குதளங்கள்;
கடலூர் மாவட்டம், புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் 8 கோடி ரூபாய் செலவில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள மீன் இறங்குதளம், மயிலாடுதுறை மாவட்டம், குட்டியாண்டியூர் மீனவ கிராமத்தில் 6 கோடியே 83 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மீன் இறங்குதளம், மயிலாடுதுறை மாவட்டம், கொடியம்பாளையம் மீனவ கிராமத்தில் 2 கோடியே 85 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மீன் இறங்குதளம், புதுகோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் மீனவ கிராமத்தில் 10 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளம்;
கடலூர் மாவட்டம், வெள்ளார் நதியில் 30 கோடி ரூபாய் செலவில் நிரந்தரமாக நிலைபடுத்தப்பட்டுள்ள முகத்துவாரம், தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு மீனவ கிராமத்தில் 41 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டுள்ள மீன் இறங்குதளம், காஞ்சிபுரம் மாவட்டம், செம்பரம்பாக்கம் அரசு மீன் விதைப்பண்ணையில் 2 கோடியே 75 இலட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ள மரபணு மேம்படுத்தப்பட்ட திலேப்பியா மீன்குஞ்சு பொரிப்பகம்; என மொத்தம் 426 கோடியே 13 இலட்சம் ரூபாய் செலவிலான 13 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
மீன் இறங்குதளங்களை மேம்படுத்தும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல்
இராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் 18-8-2023 அன்று நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில் முதலமைச்சர் இராமநாதபுரம் மாவட்ட மீனவர்களின் முக்கிய கோரிக்கையான தங்கச்சிமடம் மீன் இறங்குதளம் தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திட நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். அதன்படி, இராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடம் மீனவ கிராமத்தில் 150 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படவுள்ள மீன் இறங்குதளம்;
இராமநாதபுரம் மாவட்டம், ரோச்மா நகர் மீனவ கிராமத்தில் 20 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படவுள்ள மீன் இறங்குதளம் ஆகிய பணிகளுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். இப்பணியின் மூலம், கடல் அரிப்பு முற்றிலுமாக தடுக்கப்படும், படகுகளை இயக்குவது மிகவும் சுலபமாகும், மீனவர்களின் சமூக-பொருளாதார நிலை உயரும், அதிகப்படியான படகுகளை பாதுகாப்பாக நிறுத்த வழிவகை செய்வதோடு, மீன்களை சுகாதாரமான முறையில் கையாளவும் இயலும்.
பாக்வளைகுடா பகுதி மீனவர் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கான சிறப்புத் திட்டங்கள்
இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பாக் வளைகுடா பகுதியில் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், மொத்தம் 216 கோடியே 57 இலட்சம் ரூபாய் செலவில் ஒரு சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர், கடந்த 07.04.2025 அன்று சட்டமன்றத்தில் அறிவித்தார்கள். இத்திட்டத்தின் கீழ், சுமார் 60,200 மீனவர் மற்றும் மீனவ மகளிருக்கு பல்வேறு மீன்வளம் சார்ந்த மற்றும் மீன்வளம் சாராத தொழில்கள் தொடங்குவதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அவர்கள் அத்தொழிலை தொடங்குவதற்கான நிதியுதவிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு, அத்தொழில் மூலம் அவர்கள் உருவாக்கும் பொருட்களை விற்பனை செய்வதற்கான உதவிகளும் வழங்கப்படும். அச்சிறப்புத் திட்டத்தினை தொடங்கி வைக்கும் விதமாக முதலமைச்சர் அவர்கள் மேற்காணும் மாவட்டங்களைச் சார்ந்த 5 மீனவ கூட்டுறவு சங்கங்களுக்கு செயல்முறை ஆணைகளை வழங்கினார்.
மகளிர் கூட்டுக் குழுக்களுக்கு நுண்கடன் வழங்கும் “அலைகள்” திட்டம்
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கீழ் செயல்படும் மகளிர் மீனவ கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ள மீனவ மகளிரின் வாழ்வாதாரத்தினை உயர்த்திட மீன் வியாபாரம், கடற்பாசி வளர்ப்பு, மதிப்பு கூட்டு உணவுப் பொருட்கள் தயாரித்தல் போன்ற மீன்பிடி சார்ந்த உபதொழில்களில் ஈடுபட்டு வரும் 50,000 மீனவ மகளிர் பயடையும் வகையில் தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வள கூட்டுறவு இணையத்தின் மூலம் மகளிர் கூட்டுக் குழுக்களுக்கு நுண்கடன் வழங்கும் “அலைகள்” திட்டம் 2025-26 ஆம் ஆண்டின் மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தினை முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்து, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு கடன் உதவித்தொகைகளை வழங்கினார்.
மீனவப் பயனாளி பெருமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல்
மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில், தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தினை எதிர்கொள்ளும் வகையில் 16 கடலோர மீனவ கிராமத் திட்டத்தின் கீழ், மீனவ மக்களுக்கு இழுவை இயந்திரம், நடமாடும் மீன் உணவகம், குளிர்பதனப்பெட்டி, புதிய மீன் தீவன ஆலைகள், கொல்லைப்புற அலங்கார மீன்வளர்ப்பு குளங்கள், நடுத்தர அலங்கார மீன்வளர்ப்பு குளங்கள், ஒருங்கிணைந்த அலங்கார மீன்வளர்ப்புக் குளங்கள், கூண்டுகளில் கடல் மீன்வளர்த்தல், கயிறு மூலம் கடற்பாசி வளர்த்தல், உயிர் கூழ்ம திரள் குளங்கள் அமைத்து இறால் வளர்த்தல் மற்றும் உள்ளீடுகளுக்கு மானியம் வழங்குதல், புதிய இறால் வளர்ப்பு குளங்கள் மற்றும் உள்ளீடுகளுக்கு மானியம் வழங்குதல், குளிர்காப்பிட்ட வாகனம், குளிரூட்டப்பட்ட வாகனம், குளிர்காப்பு பெட்டியுடன் கூடிய இரண்டு சக்கர வாகனம் மற்றும் மூன்று சக்கர வாகனம்,
இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டு மீட்க இயலாத படகுகளின் உரிமையாளர்களுக்கு நிவாரணம், உயிர்காப்பு சட்டை, செயற்கைக்கோள் தொலைபேசி, மீன்பிடி படகு ஓட்டுநர் உரிமம் சான்றிதழ், கடல்சார் கல்வி பயிலும் மீனவ இளைஞர்களுக்கு கல்வி உதவித்தொகை, மீன்குஞ்சு வளர்ப்புக் குளங்கள், புதிய மீன்வளர்ப்புக் குளங்கள், உயிர்கூழ்ம முறையில் சிறிய அளவிலான மீன்வளர்ப்புக் குளங்கள்; தமிழ்நாடு மீனவர் நலவாரியத்தின் மூலம் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான நிவாரணத்தொகை, ஈமச்சடங்கு உதவித்தொகை, விபத்து மரணத்திற்கான உதவித்தொகை; என மொத்தம் 2,290 பயனாளிகளுக்கு 10 கோடியே 67 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் அடையாளமாக 30 பயனாளிகளுக்கு முதலமைச்சர் அவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். இராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பி. சங்கர், எஸ்.சுதர்சனம், ஆர்.டி.சேகர், தாயகம் கவி, துரை சந்திரசேகர், காதர்பாட்சா முத்துராமலிங்கம், எம்.கே.மோகன், ஜோசப் சாமுவேல், எபிநேசர், ஆர்.மூர்த்தி, தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் ந.கௌதமன், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை செயலாளர் டாக்டர் என்.சுப்பையன், இ.ஆ.ப., மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் இரா.கஜலட்சுமி,இ.ஆ.ப., சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த், இ.ஆ.ப., திருவொற்றியூர் மண்டலக் குழு தலைவர் தனியரசு, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post சென்னையில் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.596.13 கோடி செலவில் 13 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.