விரைவு ரயிலில் சென்னை வந்த பயணியிடம் 30 சவரன் திருட்டு

தாம்பரம், மே 23: சோழிங்கநல்லூர், நியூ குமரன் நகரை சேர்ந்தவர் தளவாய். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். தளவாய் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர்கள் குடும்பத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன், தூத்துக்குடி மாவட்டம், திசையன்விளை பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தனர். அங்கிருந்து நேற்று முன்தினம் இரவு, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் முன்பதிவு செய்யாத பெட்டியில் சென்னைக்கு புறப்பட்டனர். அப்போது, தங்களின் 30 சவரன் நகையை ஒரு பையில் வைத்து, அந்த பைக்கு பூட்டு போட்டு கொண்டு வந்தனர். தாம்பரம் ரயில் நிலையத்தில் வந்து இறங்கி, வீட்டிற்கு காரில் சென்றபோது அவர்களது பை பிளேடால் கிழிக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 30 சவரன் நகை திருடுபோனது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து தாம்பரம் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் புகாரை ஏற்க மறுத்த ரயில்வே போலீசார், உங்கள் வீடு சோழிங்கநல்லூர் பகுதியில் உள்ளதால், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி தெரிவித்து அனுப்பியுள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் சோழிங்கநல்லூர் பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்த முயற்சித்த போது, அந்த போலீசார், நகை திருடு போனது ரயிலில் என்பதால், தாம்பரம் ரயில்வே காவல் நிலையத்தில் தான் புகார் அளிக்க வேண்டும் என கூறி அனுப்பியுள்ளனர். இதனால் மாறி, மாறி அழைக்களிக்கப்பட்டவர்கள் மீண்டும் நேற்று தாம்பரம் ரயில்வே காவல் நிலையத்திற்கு வந்து கண்ணீர் மல்க ரயிலில் தான் நகை திருடப்பட்டு உள்ளது. எனவே அவற்றை கண்டுபிடித்து தர வேண்டும், என புகார் அளித்தனர். நீண்ட இழுபறிக்கு பின்னர் புகாரை ஏற்றுக் கொண்ட ரயில்வே போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தாம்பரம் ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து நகை திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post விரைவு ரயிலில் சென்னை வந்த பயணியிடம் 30 சவரன் திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: