பெரம்பூர்: நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சிறுவனை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். வியாசர்பாடியைச் சேர்ந்தவர் கலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்ட நிலையில், கடந்த 5 மாதங்களாக கலா தனது 4 வயது குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 14ம் தேதி கலா, குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு தண்ணீர் பிடிக்கச் சென்றுள்ளார். அப்போது இவரது வீட்டின் அருகே வசித்து வரும் 17 வயது சிறுவன் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். தண்ணீர் பிடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்த கலா, கூச்சலிடவே சிறுவன் அங்கிருந்து ஓடிவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கலா குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் வியாசர்பாடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். மேலும் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக வியாசர்பாடி போலீசார் விசாரணை செய்து வியாசர்பாடி காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்து செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து, செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பினர்.
The post 4 சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் சிறுவன் கைது appeared first on Dinakaran.