துணைவேந்தர் நியமன விவகாரத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு மனு

சென்னை: துணைவேந்தர் நியமன விவகாரத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. தமிழக பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குவது, பல்கலைக் கழகங்களின் வேந்தராக முதலமைச்சரை நியமிப்பது உள்ளிட்ட அம்சங்கள் அடங்கிய 10 மசோதாக்கள் தமிழக சட்ட பேரவையில் நிறைவேற்றப்பட்டன. இதற்கு ஒப்புதல் அளிக்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அவர் ஒப்புதல் அளிக்காததால் சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கூட்டி அதில் மீண்டும் சட்டமசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

அதற்கும் ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஏற்கனவே ஆளுநருக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ள 10 மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் சிறப்பு அதிகாரம் மூலம் ஒப்புதல் அளித்து உத்தரவிட்டது. இந்த சட்டங்களில், துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கிய பிரிவுகளை எதிர்த்து, பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாசலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு, இந்த மனுவுக்கு ஒன்றிய மற்றும் தமிழக அரசுகள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தது.

இந்நிலையில், இன்று துணைவேந்தர் நியமன விவகாரத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி அங்கு மனு தாக்கல் செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவலை தெரிவிக்கும்படி உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பாஜக முன்னாள் மாவட்ட செயலாளரான வெங்கடாசலபதி அரசியல் உள்நோக்கத்துடன் மனு தாக்கல் செய்துள்ளார். விடுமுறை கால நீதிமன்றத்தில் எப்படி வழக்கு தொடர முடியும்?. ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் வகையில் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல.

எந்த பொதுநலனும் இன்றி அரசியல் உள்நோக்கத்துடன் மட்டுமே வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் 9 சட்டங்களை எதிர்த்து விடுமுறை காலத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை. சட்டம் ஏப்.11ம் தேதியே அமலுக்கு வந்த நிலையில் 30ம் தேதி வரை வழக்கு தொடராமல் இருந்தது ஏன்?. விடுமுறை காலத்தில் அவசரமாக வழக்கு தொடர்ந்தது ஏன்? என்று மனுதாரர் குறிப்பிடவில்லை. 9 சட்டங்களை எதிர்த்து ஒரே வழக்காக எப்படி மனு தாக்கல் செய்ய முடியும்?, 9 சட்டங்களை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கில் பல்கலை.களை ஏன் எதிர்மனுதாரராக சேர்க்கவில்லை? என துணைவேந்தர் நியமன அதிகார வழக்கில் தமிழ்நாடு அரசு அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியுள்ளது.

The post துணைவேந்தர் நியமன விவகாரத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் வழக்கு: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு மனு appeared first on Dinakaran.

Related Stories: