ஊட்டி: பத்ம விபூஷன் விருது பெற்ற இந்திய அணுசக்தி கழக முன்னாள் தலைவர் எம்.ஆர்.சீனிவாசன் (95) ஊட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று அதிகாலை காலமானார். எம்.ஆர் சீனிவாசன் எனப்படும் மாலூர் ராமசாமி சீனிவாசன் செப்டம்பர் 1955ல் அணுசக்தி துறையில் சேர்ந்தார். மேலும், இந்தியாவின் முதல் அணு ஆராய்ச்சி உலையான அப்சராவின் கட்டுமானத்தில் டாக்டர் ஹோமி பாபாவுடன் இணைந்து பணியாற்றினார். இது 1956ம் ஆண்டு ஆகஸ்டில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற பணியாக இருந்தது. 1959 ஆகஸ்டில் இந்தியாவின் முதல் அணு மின் நிலைய கட்டுமானத்திற்கான முதன்மை திட்ட பொறியாளராக நியமிக்கப்பட்டார்.
1967ல் மெட்ராஸ் அணு மின் நிலைய தலைமை திட்ட பொறியாளராக பொறுப்பேற்றார். 1974ல் அணுசக்தி திட்ட பொறியியல் பிரிவின் இயக்குநராகவும், 1984ல் அணுசக்தி வாரிய தலைவராகவும் உயர்ந்தார். 1987ல், அவர் அணுசக்தி ஆணைய தலைவராகவும், அணுசக்தி துறை செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். அதே ஆண்டில், அவர் இந்திய அணுசக்தி கழக நிறுவனர்-தலைவராக ஆனார். அவரது தலைமையின் கீழ் 18 அணுசக்தி அலகுகள் உருவாக்கப்பட்டன. இந்தியாவின் அணுசக்தி திட்டத்திற்கு அவர் ஆற்றிய சிறந்த பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக, நாட்டின் மிக உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மவிபூஷன் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
ஓய்விற்கு பின் மனைவியுடன் நீலகிரி மாவட்டம், ஊட்டியில் வசித்து வந்தார். இந்நிலையில், வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று அதிகாலை அவர் காலமானார். அவரது உடல் நாளை (22ம் தேதி) காலை 11 மணிக்கு வெலிங்டன் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், இந்திய அணு ஆற்றல் திட்டத்தின் தூணாக விளங்கிய முனைவர் சீனிவாசனின் மறைவினால் வருந்துகிறோம். சீனிவாசன் பயணம் இந்திய அணு திட்டத்தின் தந்தையாக போற்றப்படும் முனைவர் ஹோமி ஜே. பாபாவுடன் இணைந்து இந்தியாவின் முதல் அணு உலையை கட்டமைப்பதில் தொடங்கியது.
தேசத்தின் வளர்ச்சிக்காக உண்மையாக பாடுபட்ட அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார். பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
The post பத்ம விபூஷன் விருது பெற்ற இந்திய அணுசக்தி கழக மாஜி தலைவர் மரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.