ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் கைவரிசை ஏஐ செயலி விற்பதாக கூறி ரூ. 3.5 கோடி மோசடி: சென்னை இன்ஜினியர் கைது

புதுச்சேரி: ஏஐ செயலியை விற்பதாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் ரூ.3.5 கோடி வரை மோசடி செய்த சென்னை இன்ஜினியரை போலீசார் கைது செய்தனர். ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஆன்லைன் டிரேடிங்கிற்கு செயலி இருப்பதாகவும், அதுவே தானாக முதலீடு செய்து ஒரு லட்சத்துக்கு மாதம் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை லாபம் சம்பாதித்து தரும் என சமூக வலைதளத்தில் விளம்பரம் வெளியானது. இதை பார்த்த பலர் அந்த செயலியை வாங்கினர். புதுவையில் செயலியை பெற்றவர்கள் இதற்காக ரூ.40 ஆயிரம் கட்டணம் செலுத்தியுள்ளனர். ஆனால் அந்த செயலி வேலை செய்யவில்லை. செயலியை விற்றவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சைபர் கிரைம் போலீசில் பாதிக்கப்பட்ட 7 பேர் புகார் தெரிவித்தனர்.

சைபர் கிரைம் போலீசார் நவீன தொழில்நுட்பம் மூலம் மோசடி நபரை கண்டறிந்தனர். மோசடி செய்தவர் சென்னை நீலாங்கரையை சேர்ந்த அஸ்வின் விக்னேஷ்(32) என்பது தெரிய வந்தது. இன்ஜினியரிங் பட்டதாரியான இவர், புதுவை மட்டுமின்றி, நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் போலி செயலியை விற்று சுமார் ரூ.3.5 கோடி வரை மோசடி செய்துள்ளார். இதையடுத்து தனிப்படை போலீசார் வழக்கு பதித்து சென்னை சோழிங்கநல்லூரில் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 14 லேப்டாப்கள், ஒரு கார், ரூ.7 லட்சத்து 60 ஆயிரம், மின்சாதன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர் படித்து முடித்தவுடன் இதேபோல் மோசடி டிரேடிங் கம்பெனியில் வேலையில் சேர்ந்துள்ளார். அதில் இருந்து கற்றுக் கொண்டு சென்னையில் தனியாக நிறுவனத்தை தொடங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

The post ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் கைவரிசை ஏஐ செயலி விற்பதாக கூறி ரூ. 3.5 கோடி மோசடி: சென்னை இன்ஜினியர் கைது appeared first on Dinakaran.

Related Stories: