பொதுப்பாதையில் ஓட்டல் வாகனங்கள் நிறுத்தம் நடிகர் சூரி சகோதரர் மீது கலெக்டரிடம் புகார்

மதுரை: நடிகர் சூரியின் சகோதரருக்கு எதிராக மதுரை கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரை, நரிமேடு சோனையார் கோயில் மெயின்ரோடு பகுதியில் அச்சகம் நடத்தி வரும் முத்துச்சாமி (55), மதுரை கலெக்டர் சங்கீதாவிடம் நேற்று அளித்த மனு:கடந்த 7 வருடமாக அச்சகம் நடத்தி வருகிறேன். எனது அச்சகத்தின் கீழ் பகுதியில் நடிகர் சூரியின் சகோதரர் லட்சுமணன் ஓட்டல் நடத்தி வருகிறார். இதற்காக பொதுப்பாதையை ஆக்கிரமித்து, பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் ஓட்டலுக்கு வரும் வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளார்.

இந்த பகுதியில் ஏராளமான பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளின் வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட செல்ல முடியவில்லை. இதனால், மாணவ, மாணவிகள் மட்டுமின்றி பொதுமக்களும் மிகுந்த சிரமம் அடைகின்றனர். இதனால், எங்களிடையே தகராறு ஏற்பட்ட நிலையில், மாடிக்கு செல்லும் பாதையை அடைத்து பூட்டு போட்டு பூட்டி விட்டனர். என்னை காலி செய்ய வைப்பதற்கான செயல்களை தொடர்ந்து செய்கின்றனர். எனவே, நடிகர் சூரியின் சகோதரர் லட்சுமணன் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

The post பொதுப்பாதையில் ஓட்டல் வாகனங்கள் நிறுத்தம் நடிகர் சூரி சகோதரர் மீது கலெக்டரிடம் புகார் appeared first on Dinakaran.

Related Stories: