புழல் ஏரி நீர் இருப்பு 3 டிஎம்சியாக உயர்வு

புழல்: புழல் ஏரிக்கு நேற்று காலை பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து உபரிநீர் வரத்து அதிகரிப்பால், நீர் இருப்பு 3 டிஎம்சியாக உயர்ந்து, கடல் போல் காட்சியளிக்கிறது. சென்னை நகர மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் புழல் ஏரி முக்கிய பங்குவகிக்கிறது. கடந்த சில நாட்களாக பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து புழல் ஏரிக்கு அதிகளவு உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் நேற்று காலை புழல் ஏரியின் நீர்மட்டம் அதிகரித்து நீர் இருப்பு 3 டிஎம்சியாக உயர்ந்துள்ளது.

மொத்தம் 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில், நேற்று காலை நிலவரப்படி நீர் இருப்பு 3002 மில்லியன் கன அடியாக உள்ளது. புழல் ஏரியின் முழு கொள்ளளவான 21.2 அடியில், தற்போது 19.95 அடி நீர் இருப்பு உள்ளது. பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து புழல் ஏரிக்கு விநாடிக்கு 297 கனஅடி உபரிநீர் வந்து கொண்டிருக்கிறது. இதில், சென்னை நகர மக்களின் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 184 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, புழல் ஏரியில் 90.97 சதவீத கொள்ளளவுடன் 3 டிஎம்சி அளவுக்கு நீர் நிரம்பியுள்ளதால், கடல் போல் காட்சியளித்து வருகிறது.

The post புழல் ஏரி நீர் இருப்பு 3 டிஎம்சியாக உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: