ராக்கெட் தோல்வி குறித்து ஆராய குழு அமைத்துள்ளோம்: இஸ்ரோ தலைவர் பேட்டி

சென்னை: ராக்கெட் தோல்வி குறித்து ஆராய ஒரு குழு அமைத்துள்ளோம் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார். இந்திய விண்வெளி ஆய்வுத்துறை இஸ்ரோ தலைவர் நாராயணன் நேற்று இரவு 7.30 மணிக்கு, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், சென்னையில் இருந்து பெங்களூர் புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: ராக்கெட் தோல்வி குறித்து கண்டறிய, ஒரு குழுவை அமைத்துள்ளோம்.

அந்தக் குழுவினர் ஆய்வுப் பணியை மேற்கொண்டு இருக்கின்றனர். அந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு தான் வந்திருக்கிறேன். அதன் காரணங்களை கண்டுபிடித்து, அடுத்த ராக்கெட்டில் அதேபோன்று நிலை ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம். ராக்கெட் சோதனை தோல்வி அடைந்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது. ஆனாலும் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராக்கெட் வீதம், இன்னும் 13 ராக்கெட்டுகள் தொடர்ச்சியாக விண்ணில் செலுத்த இருக்கிறோம்.

இந்த ராக்கெட் தோல்வி அடைந்தாலும், அடுத்தடுத்தது நினைத்தது போல, ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராக்கெட், விண்ணிற்கு ஏவப்பட உள்ளது. மக்கள் சந்தோஷமாகவும், பாதுகாப்பாக வாழ வேண்டும் என்பதற்கான, எல்லா விதமான பணிகளையும், இந்திய விண்வெளித் துறை செய்து வருகிறது. இந்தியாவுக்கு தேவையாக எங்களால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதை எல்லாம் விண்வெளி துறையில் சிறப்பாக செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post ராக்கெட் தோல்வி குறித்து ஆராய குழு அமைத்துள்ளோம்: இஸ்ரோ தலைவர் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: