ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்க எம்பிக்கள் குழு வெளிநாடுகளுக்கு பயணம்: ஒன்றிய அரசு முடிவு


புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விளக்க அனைத்துக் கட்சி எம்பி.க்கள் குழுவை அனுப்ப ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலையடுத்து ஆபரேஷன் சிந்தூர் என்ற ராணுவ நடவடிக்கையை இந்தியா எடுத்தது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத மையங்களை குறிவைத்து இந்திய விமான படை தாக்குதல் நடத்தியது. இதில் 9 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்க எம்பிக்கள் குழுவை பல்வேறு நாடுகளுக்கு அனுப்ப ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதில் பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ்,திமுக, என்சிபி(சரத்பவார்),பிஜேடி, மார்க்சிஸ்ட் கட்சி எம்பிக்கள் இடம் பெறலாம் என கூறப்படுகிறது. இது குறித்து அரசு வட்டாரங்கள் கூறுகையில், வெளிநாடுகளுக்கு தூதுக்குழுவினை அனுப்புவது குறித்து பல்வேறு கட்சிகளிடம் அரசு தெரிவித்துள்ளது. இதில் வெளிநாடுகளுக்கு எம்பிக்களை அனுப்ப சில கட்சிகள் சம்மதம் தெரிவித்துள்ளன. மொத்தம் எத்தனை எம்பிக்கள் இடம் பெறுவார்கள் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. 30க்கும் மேற்பட்ட எம்பிக்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அடுத்த வாரம் வெளிநாடு செல்லும் எம்பிக்கள் 10 நாட்கள் வரை வெளிநாட்டில் சுற்றுபயணம் செய்வர். ஆளும் பாஜ சார்பில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்குர், ஒடிசாவை சேர்ந்த எம்பி அபரஜிதா சாரங்கி ஆகியோர் இடம் பெறுவார்கள். காங்கிரஸ் கட்சியில் இருந்து சசி தரூர்,மனிஷ் திவாரி, சல்மான் குர்ஷித், அமர்சிங் ஆகியோர் செல்ல உள்ளனர். திரிணாமுல் கட்சியின் சுதீப் பந்தோபாத்யாய,பிஜேடியின் சாஸ்மித் பத்ரா, ஏஐஎம்ஐஎம் கட்சியின் அசாதுதீன் ஒவைசி ஆகிய எம்பிக்களின் பெயர்களும் அடிபடுகின்றன என தெரிவித்தன. இந்த சுற்றுப்பயணம் குறித்து அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக தகவல் வரவில்லை.

The post ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்க எம்பிக்கள் குழு வெளிநாடுகளுக்கு பயணம்: ஒன்றிய அரசு முடிவு appeared first on Dinakaran.

Related Stories: