எடப்பாடி பழனிசாமி தலைமையில் மே 29, 30ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை: மே 29, 30 ஆகிய தேதிகளில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக, பாஜ தனித்தனியே சந்தித்து பெரும் தோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து 2026ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்காக பாஜ தலைமையிலான கூட்டணியில் அதிமுக இணைந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக ஒருபோதும் பாஜவுடன் கூட்டணியே கிடையாது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னணி தலைவர்கள் கூறி வந்த நிலையில், பாஜவுடன் அதிமுக கூட்டணி வைத்தது கட்சியினரிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதையடுத்து கடந்த மாதம் 25ம் தேதி அவசரவசரமாக அதிமுக செயலாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. பாஜவுடன் கூட்டணி அமைத்த பின் நடந்த முதல் கூட்டம் என்பதால் பரபரப்பாக இருந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி சமாதானப்படுத்தியதாக கூறப்பட்டது. இதைத்தொடந்து கடந்த 2ம் தேதி நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் பாஜவுடன் கூட்டணி அமைத்ததற்கு செயற்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்தகட்ட தேர்தல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள மே. 29, 30 ஆகிய தேதிகளில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், வருகின்ற 29, 30 ஆகிய தேதிகளில் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து, மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. 2 நாட்களும் காலை, மாலை என 2 கட்டங்களாக ஆலோசனை கூட்டம் நடைபெறும்.

29ம் தேதியன்று புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்களுடனும், 30ம் தேதியன்று திருப்பூர், கோவை, நீலகிரி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர்,வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்களுடனும் ஆலோசனை நடைபெறும். மேற்கண்ட ஆலோசனைக் கூட்டங்களில், சம்பந்தப்பட்ட மாவட்டப் பொறுப்பாளர்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post எடப்பாடி பழனிசாமி தலைமையில் மே 29, 30ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: