திருப்பதி கலப்பட நெய் விவகாரம்: திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவன உரிமத்தை சஸ்பெண்ட் செய்த உத்தரவு ரத்து!!

சென்னை: திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவன உரிமத்தை சஸ்பெண்ட் செய்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதமான லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெயில் விலங்கு கொழுப்பு கலக்கப்படுவதாக கூறி பெரும் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவன உரிமத்தை நிறுத்தி வைத்து உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து ஏ.ஆர்.டெய்ரி நிறுவனம் சார்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி வீ.லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நெய் மட்டுமின்றி பால் பொருள் உற்பத்திக்கான உரிமத்தை சஸ்பெண்ட் செய்ததால் நிறுவனம் பெரிதும் பாதிப்புக்குள்ளானதாகவும், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பு வாதிடப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட ஐகோர்ட் கிளை தீர்ப்பை தள்ளிவைத்தது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கானது நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு
விசாரணைக்கு வந்தது. ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தின் உரிமத்தை நிறுத்தி வைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த விவகாரம் குறித்து மறுபரிசீலனை செய்யும் படி உணவு பாதுகாப்பு மற்றும் தரம் நிர்ணயம் ஆணைய உரிமம் வழங்கும் அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார். மறுபரிசீலனை செய்யும் வரை நெய் உற்பத்திக்கான உரிமம் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கருதவேண்டும் எனவும், உரிமம் நிறுத்தி வைத்த உத்தரவு 6 வாரங்களுக்கு மட்டுமே நடைமுறையில் இருக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

The post திருப்பதி கலப்பட நெய் விவகாரம்: திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவன உரிமத்தை சஸ்பெண்ட் செய்த உத்தரவு ரத்து!! appeared first on Dinakaran.

Related Stories: