செந்துறை ஊராட்சி ஒன்றிய பகுதியில் ரூ.1.04 கோடி மதிப்பில் 13 புதிய திட்டப்பணிகள்: அமைச்சர் சா.சி சிவசங்கர் துவக்கி வைத்தார்

அரியலூர்,மே 14: அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் ரூ.77.80 லட்சம் மதிப்பீட்டில் 5 முடிவுற்ற திட்டப்பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் திறந்து வைத்து, ரூ.1.04 கோடி மதிப்பீட்டில் 13 புதிய திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் இரத்தினசாமி தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, அரியலூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் கிராம சாலைகளை மேம்படுத்துதல், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைத்தல், பள்ளி வகுப்பறைகள் கட்டுதல், அங்கன்வாடி மையக் கட்டடங்கள் கட்டுதல், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர், செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராம ஊராட்சிகளில் ரூ.77.80 லட்சம் மதிப்பீட்டில் 5 முடிவுற்ற திட்டப்பணிகளும், ரூ.1.04 கோடி மதிப்பீட்டில் 13 புதிய திட்டப்பணிகளும் என மொத்தம் ரூ.1.81 கோடி மதிப்பீட்டிலான பணிகளை இன்றையதினம் தொடங்கி வைத்தார்.

அதன்படி செந்துறை ஊராட்சி ஒன்றியம், பாளையக்குடி ஊராட்சி, கிளிமங்கலம் கிராமத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் ரூ.7.20 லட்சம் மதிப்பீட்டில் பிடாரி குளம் புனரமைக்கும் பணிகளை துவக்கி வைத்தார். தொடர்ந்து கிளிமங்கலம் கிராமத்தில் ரூ.12.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாயவிலை கட்டடத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து முதல் விற்பனையினை தொடங்கி வைத்தார். பின்னர், கிளிமங்கலம் கிராமத்தில் ரூ.10.90 லட்சம் மதிப்பீட்டில் பெரிய ஏரி புனரமைக்கும் பணியினையும், தொடர்ந்து பாளையக்குடி ஊராட்சியில் ரூ.6.50 லட்சம் மதிப்பீட்டில் பெரிய ஏரி புனரமைக்கும் பணியினையும் துவக்கி வைத்து பணிகளை விரைவாக முடித்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து, வடக்கு இரும்புலிக்குறிச்சி ஊராட்சியில் ரூ.12.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாய விலை கட்டடத்தினையும், பின்னர், தெற்கு இரும்புலிக்குறிச்சி ஊராட்சியில் ரூ.12.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாய விலை கட்டடத்தினையும் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கி முதல் விற்பனையினை தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, குமிழியம் ஊராட்சியில் ரூ.16.45 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டடம் கட்டும் பணியினை துவக்கி வைத்து, பணிகளை தரமான கட்டுமான பொருட்களை கொண்டு, உரிய காலத்திற்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து குமிழியம் ஊராட்சியில் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

பின்னர், குமிழியம் ஊராட்சியில் ரூ.12.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாய விலை கட்டடத்தினையும் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கி முதல் விற்பனையினை தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து வீராக்கன் ஊராட்சியில் ரூ.4.50 லட்சம் மதிப்பீட்டில் கிழக்கு கடந்தைப்பட்டி ஆதிதிராவிடர் பகுதி மயானக் கொட்டகை அமைக்கும் பணிகளையும், பின்னர், வீராக்கன் ஊராட்சியில் ரூ.4.50 லட்சம் மதிப்பீட்டில் ஆதிதிராவிடர் தெருவில் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியினையும் துவக்கி வைத்து பணிகளை தரமான கட்டுமான பொருட்களை கொண்டு விரைவாக கட்டிமுடித்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனைத்தொடர்ந்து, கீழமாளிகை ஊராட்சி, வடக்கு தெருவில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும், பின்னர், மத்துமடக்கி கிராமத்தில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியினையும், தொடர்ந்து, மத்துமடக்கி வடக்கு தெருவில் ரூ.7.86 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணயினையும், பின்னர், கீழமாளிகை ஆதிதிராவிடர் தெருவில் ரூ.9.87 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும், தொடர்ந்து, கீழமாளிகை பெரிய ஏரியில் ரூ.11.57 லட்சம் மதிப்பீட்டில் ஏரி ஆழப்படுத்துதல் மற்றும் கரைகளை பலப்படுத்துதல் பணிகளையும் தொடங்கி வைத்தார்.

பின்னர், கீழமாளிகையில் ரூ.9.21 லட்சம் மதிப்பீட்டில் கதிரடிக்கும் களம் அமைக்கும் பணிகளையும், தொடர்ந்து கீழமாளிகை ஆதிதிராவிடர் பகுதியில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளையும் துவக்கி வைத்தார். அப்போது, பணிகளை உரிய காலத்திற்குள் விரைவாகவும், தரமாகவும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் உமா மகேஸ்வரி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, செந்துறை தாசில்தார் வேலுமணி, மாவட்ட திமுக பொறியாளர் பிரிவு அமைப்பாளர் லூயி கதிரவன், செந்துறை ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், எழில்மாறன், மாவட்ட அயலக அணி அமைப்பாளர் ராமராஜன், மாவட்ட பிரதிநிதி காலமேகம் உள்பட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post செந்துறை ஊராட்சி ஒன்றிய பகுதியில் ரூ.1.04 கோடி மதிப்பில் 13 புதிய திட்டப்பணிகள்: அமைச்சர் சா.சி சிவசங்கர் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: