மது, இறைச்சியில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து துபாய் டிராவல்ஸ் அதிபரை கொன்ற கள்ளக்காதலி கைது

கோவை: மது, இறைச்சியில் 30க்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து துபாய் டிராவல்ஸ் அதிபரை கொன்ற கள்ளக்காதலியை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடியை சேர்ந்தவர் தியாகராஜன் (69). இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோவைக்கு வந்து பீளமேடு காந்திமா நகர் பகுதியில் வசித்து வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த கோமதி என்ற பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. கோமதியின் மகள் சாரதாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்த அவரது கணவர் குணவேலை தியாகராஜன் கொலை செய்து சிறைக்கு சென்று ஜாமீனில் வெளியே வந்தார். இதையடுத்து சாரதா துபாய்க்கு வேலைக்கு சென்றார். அங்கு திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த டிராவல்ஸ் அதிபர் சிகாமணி (47) என்பவருடன் சாரதாவிற்கு கள்ளக்காதல் ஏற்பட்டது.

திடீரென சாரதாவிற்கும், சிகாமணிக்கும் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை ஏற்பட்டு சாரதா கோவை திரும்பினார். சாரதாவை சமாதானம் செய்ய சிகாமணி கடந்த 21ம் தேதி கோவைக்கு வந்தார். அவரை, சாரதா தனது வீட்டிற்கு அழைத்து சென்றார். பணத்தை பெற்று ஏமாற்றிய சிகாமணியை கொலை செய்ய தியாகராஜன், சாரதா ஆகியோர் திட்டமிட்டனர். இதற்காக, நெல்லையை சேர்ந்த பிரபல ரவுடி பசுபதிபாண்டியன் கூட்டாளி குட்டி தங்கம் என்கிற புதியவன் என்பவரையும் கோவைக்கு வரவழைத்தார். கடந்த 22ம் தேதி இரவு சிகாமணிக்கு மது மற்றும் இறைச்சியில் 30க்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகள், வலி நிவாரணி மாத்திரைகளை கலந்து கொடுத்து கொலை செய்தனர். தொடர்ந்து தியாகராஜன், புதியவன், சாரதா ஆகியோர் சிகாமணியின் உடலை கார் டிக்கியில் ஏற்றி கரூர் பொன்னமராவதி அடுத்த கே.பரமத்தி என்ற பகுதிக்கு கொண்டு சென்று வீசினர்.

இந்த நிலையில் சிகாமணியின் மனைவி பிரியா கோவை பீளமேடு போலீசில் சிகாமணி மாயமாகிவிட்டதாக புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் சிகாமணியை தியாகராஜன் (69), புதியவன் (48), தியாகராஜனின் கள்ளக்காதலி கோமதி (53), நிலா (33), சாரதா (35) மற்றும் அவர்களின் உறவினர் ஸ்வாதி (26) ஆகியோர் கொலை செய்தது தெரியவந்தது. இவர்களில் தியாகராஜன், புதியவன், கோமதி, நிலா, ஸ்வாதி ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் துபாய்க்கு தப்பிச்சென்ற சாரதா அங்கு இருந்தால் சிகாமணியின் நண்பர்கள், உறவினர்களால் தனது உயிருக்கு ஆபத்து என பயந்து கோவைக்கு திரும்பினார். இதனை போலீசார் கண்டுபிடித்தனர். சாரதாவை 2 தனிப்படையினர் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று சாரதா சரவணப்பட்டி பகுதியில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. ரூ.30 லட்சம் எங்கே? கோவைக்கு வந்த சிகாமணி கோவை அல்லது கோத்தகிரியில் ரூ.30 லட்சத்தில் வீடு அல்லது நிலம் வாங்க திட்டமிட்டுள்ளார். அதற்காக கோவையில் சில புரோக்கர்களை அணுகியுள்ளார். அதனால் சிகாமணி பணத்துடன் கோவைக்கு வந்தாரா? அந்த பணத்தை கொலையாளிகள் அபகரித்தார்களா? அல்லது பணத்தை அபகரிப்பதற்காக கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post மது, இறைச்சியில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து துபாய் டிராவல்ஸ் அதிபரை கொன்ற கள்ளக்காதலி கைது appeared first on Dinakaran.

Related Stories: