* கட்சிக்காக ரூ.5 லட்சம் செலவு செய்ததாக குமுறல், பெண் என்பதால் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு
கோவை : கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வைஷ்ணவி. இன்ஸ்டாகிராம் பிரபலமாக உள்ள இவர், தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினராக இருந்து வந்தார். இந்நிலையில் பெண் என்பதால் கட்சி நிர்வாகிகள் தன்னை புறக்கணிப்பதாக புகார் கூறி வைஷ்ணவி, தவெகவில் இருந்து விலகி உள்ளார். இது தொடர்பாக வைஷ்ணவி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
குறுகிய காலத்தில் கட்சியில் பிரபலமானாலும், எனது நோக்கமும் லட்சியமும் ஒன்றுதான்.
இந்த சமூகத்தில் மாற்றம் ஒன்று மலராதா என்றே எனது அரசியல் பயணத்தை தவெகவில் தொடர்ந்தேன். ஆனால், தொடர்ந்து நிராகரிப்பை மட்டுமே சந்தித்தேன். கடந்த 3 மாதங்களாக மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். என் வளர்ச்சியை தடுப்பதாக நினைத்து, கட்சியின் வளர்ச்சியை தடுக்க சிலர் செயல்படுகிறார்கள். நான் சிறுக, சிறுக சேமித்த ரூ.5 லட்சத்தை பல நலத்திட்ட உதவிகளுக்கு செலவு செய்தேன்.
ஆனால், கட்சியில் இருக்கும் சில நாசக்காரர்களின் சதியாலும், உயர்மட்ட நிர்வாகிகளின் போதிய ஒத்துழைப்பு இல்லாததாலும் எனது வார்டில் இருக்கும் மக்களுக்கு கூட நலத்திட்ட உதவிகள் கொடுக்க அனுமதி கிடைக்காமல் நிராகரிக்கப்பட்டேன். கட்சிக்காக உழைத்த எனக்கு பொதுக்குழு கூட்டம், பூத் கமிட்டி மாநாடு, செயற்குழு கூட்டம் என எதற்கும் பங்கேற்க அனுமதி கொடுக்கவில்லை. பொதுச்செயலாளரை சந்திக்க மேடை ஏறிய போது, நுழையவிடாமல் கீழே தள்ளிவிட்டார்கள். சமூக வலைதளங்களில் பேசக்கூடாது, போஸ்ட் போடக்கூடாது. உங்களுக்கு லைக் அதிகமாக வருவது எங்களுக்கு எரிச்சலை தருகிறது.
மாவட்ட நிர்வாகிகளை தாண்டி நீங்கள் வேகமாக வளர்வது உறுத்தலாக இருக்கிறது என வெளிப்படையாக மிரட்டினார்கள். ஏன் என்னை நிராகரிக்கிறீர்கள் என கண்ணீர் மல்க கேட்ட போது, ‘நீ கட்சி ஆரம்பித்த பிறகு தானே வந்தாய். என்ன அவசரம் போ’ என்று சொல்லி நிராகரித்தார்கள். பெண் என்பதால் வசம்பு வார்த்தைகளால் நசுக்கினார்கள். என்னுடைய மக்கள் பணிக்கு ஒரு சிலர் முற்றுப்புள்ளி வைக்க நினைக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. மக்களுக்கான சேவையை எந்த தளத்தில் இருந்தாலும் நான் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன். என்னை தவெகவில் இருந்து முழுமையாக விடுவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
The post தகாத வார்த்தைகளால் பேசி நிர்வாகிகள் மிரட்டல்: விஜய் கட்சியில் இருந்து இன்ஸ்டா பிரபலம் விலகல் appeared first on Dinakaran.