திருவண்ணாமலை மாவட்டத்தில் உழவரை தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டம்

* முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் தொடங்கினார்

* விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலை : உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தர்ப்பகராஜ் வழங்கினார்.

உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை எனும் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து நேற்று காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று இத்திட்டம் தொடங்கப்பட்டது.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 1,067 வருவாய் கிராமங்களில், மாதந்தோறும் ஒவ்வொரு வட்டாரத்திலும் 4 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு, இத்திட்டத்திற்கான சிறப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதையொட்டி, திருவண்ணாமலை அடுத்த நல்லான் பிள்ளைபெற்றாள் கிராமத்தில், உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டத்தை கலெக்டர் தர்ப்பகராஜ் தொடங்கி வைத்து, விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது, கலெக்டர் பேசியதாவது:விவசாயிகள் பயன்பெறுவதற்கான சிறப்பு திட்டங்களை முதல்வர் நிறைவேற்றி வருகிறார். அதன்படி, உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. வேளாண் துறை அலுவவலர்கள் கிராமத்தில் முகாமிட்டு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதும், அவர்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவுவதும் இத்திட்டத்தின் சிறப்பு அம்சமாகும்.

தரிசு நிலங்களை சாகுபடி நிலமாக மாற்றவும், சொட்டுநீர் பாசன திட்டம், பழ மரக்கன்றுகள் நட்டு நிலையான பொருளாார வளர்ச்சிக்கு உதவுதல் போன்ற காரணங்களுக்காக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதேபோல், ரசாயன உர பயன்பாட்டால் மண்வளம் குறைந்து மகசூல் இழப்பு ஏற்படுவதை தடுக்க முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம், சிறுதானிய இயக்கத் திட்டம் போன்ற திட்டங்கள் உழவரைத் தேடி உழவர் நலத்துறை என்னும் திட்டத்தின் மூலம் செயல்படுத்த உள்ளது.

மேலும், வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த இதர துறைகளின் தொழில்நுட்பங்கள், திட்டங்கள், இயந்திரங்கள், மதிப்பு கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்துதல் போன்ற திட்டங்களின் பயன்களை விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

அதோடு, புதிய தொழில் நுட்பங்கள் மற்றும் புதிய உத்திகள், வேளாண் சாகுபடி முறைகள், விதை நேர்த்தி, புதிதாக கண்டறிந்த வீரிய ரகங்கள், நீர் மேலாண்மை, உர மேலாண்மை, பயிர் காப்பீடு, வேளாண் விளை பொருட்களுக்கு மதிப்பு கூட்டுதல், வீட்டு காய்கறி தோட்டம், கால்நடை பராமரிப்பு போன்றவை குறித்து இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் பயன்பெறலாம். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, 23 விவசாயிகளுக்கு ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் உளுந்து விதைகள், மண்புழு உரம், குறுவை சாகுபடி- நுண்ணூட்ட கலவை உள்ளிட்ட வேளாண் கருவிகள் மற்றும் வேளாண் இடுபொருட்களை கலெக்டர் தர்ப்பகராஜ் வழங்கினார்.நிகழ்ச்சியில், வேளாண் இணை இயக்குநர் கண்ணகி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மலர்விழி, பிடிஓக்கள் பரமேஸ்வரன், பிரத்திவிராஜ் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post திருவண்ணாமலை மாவட்டத்தில் உழவரை தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: