கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பேரூராட்சி பகுதிகளிலும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்படும்

*ஆட்சியர் பிரசாந்த் தகவல்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பேரூராட்சி பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது என்று ஆட்சியர் பிரசாந்த் கூறினார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் பேரூராட்சிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்பட உள்ளதையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை செயல்படுத்திடும் வகையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.

பேரூராட்சிகளில் அரசு உதவி பெறும் பள்ளிகள் விபரம், மாணவர்களின் எண்ணிக்கை, காலை உணவுத் திட்டத்தை கண்காணித்திட அமைக்கப்பட்டுள்ள பேரூராட்சி அளவிலான குழுக்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் கேட்டறிந்தார்.

தொடர்ந்து இத்திட்டத்தின் கீழ் பள்ளி குழந்தைகளுக்கு உணவு சமைக்கும் பணியினை மேற்கொள்வதற்காக மகளிர் சுய உதவிக்குழுக்களை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள், பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள், சமையற்கூடங்களின் நிலை, பொருட்கள் வைப்பறை, மின் இணைப்பு, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் இம்மையங்களை ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள மாவட்ட அளவிலான குழுக்களின் விவரம், மாவட்ட, வட்டார அளவிலான கண்காணிப்பு குழுக்கள், பேரூராட்சி அளவிலான முதன்மை குழு போன்ற பல்வேறு தகவல்கள் குறித்து விரிவாக ஆட்சியர் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.

மேலும் தமிழ்நாடு முதலமைச்சரால் விரைவில் தொடங்கப்பட உள்ள பேரூராட்சிகளில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தினை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர் பிரசாந்த் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா, திருக்கோவிலூர் உதவி ஆட்சியர் ஆனந்த்குமார்சிங், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) தனலட்சுமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன், மகளிர் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட அனைத்துத்துறை மாவட்ட நிலை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

The post கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பேரூராட்சி பகுதிகளிலும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்படும் appeared first on Dinakaran.

Related Stories: