சிக்கன் கடையில் மெஷினை இயக்கியபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

சேத்துப்பட்டு, ஏப்.29: தேவிகாபுரத்தில் உள்ள சிக்கன் கடையில் மெஷினை இயக்கியபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார். திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரம்- போளூர் சாலையில் தேவிகாபுரத்தை சேர்ந்த பிச்சாண்டி மகன் பரணி என்பவர் கடந்த வாரம் சிக்கன் கடையை புதிதாக திறந்துள்ளார். இவரது கடையில் அதே பகுதியை சேர்ந்த அசேன்பாஷா மகன் அப்துல்காதர்(19), அவரது தம்பி அப்துல்கலாம்(17) ஆகியோர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று காலை சிக்கன் கடையில் கோழிகளை சுத்தம் செய்யும் மெஷினை அப்துல்காதர் இயக்கினார். அப்போது, திடீரென மின்சாரம் தாக்கியதில் மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தம்பி அப்துல்கலாம், அண்ணனை மீட்க முயன்றபோது அவரையும் மின்சாரம் தாக்கியது. உடனே அவர் விலகிவிட்டார்.

இதற்கிடையில், அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வந்து மெஷினை சுவிட்ச் ஆப் செய்தனர். பின்னர் மயங்கி கிடந்த அப்துல் காதரை மீட்டு சிகிச்சைக்காக தேவிகாபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து போளூர் அத்திமூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அப்துல்காதர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த சேத்துப்பட்டு போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சிக்கன் கடையில் மெஷினை இயக்கியபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Related Stories: