திருவண்ணாமலை, மே 24: தொழிலாளர் நல வாரியங்கள் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.23 கோடி கல்வி உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, திருவண்ணாமலை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மீனாட்சி தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் மூலம் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில், தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு 18 தொழிலாளர்கள் நலவாரியங்கள் அமைக்கப்பட்டு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நலவாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம் மகப்பேறு, கண்கண்ணாடி, ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்து மரணம் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் தகுதி அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன் அடிப்படையில், கடந்த நான்கு ஆண்டுகளில் தொழிலாளர் நலவாரியத்தில் 2,04,089 நபர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ளனர். மேலும், 53,364 நபர்கள் தங்கள் பதிவினை புதுப்பித்துள்ளனர். நலவாரியங்களில் பதிவு பெற்றுள்ள தொழிலாளர்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் கல்வி உதவித் தொகையாக 10,898 தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ரூ.23 கோடியே 5 லட்சத்து 72 ஆயிரத்து 650 வழங்கப்பட்டுள்ளது. திருமண உதவித் தொகையாக 2952 தொழிலாளர்களுக்கு ரூ.5 கோடியே 42 லட்சத்து 95 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. மகப்பேறு உதவித்தொகையாக 2 தொழிலாளர்களுக்கு ரூ12 ஆயிரம், இயற்கை மரணம் அடைந்த 1069 தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 கோடியே 11 லட்சத்து 71 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. விபத்து மரணம் அடைந்த 15 தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ. 18 லட்சத்து 45 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இவர் அவர் தெரிவித்துள்ளார்.
The post ரூ.23 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது உதவி ஆணையர் தகவல் தொழிலாளர் நல வாரியங்கள் மூலம் appeared first on Dinakaran.