கலசபாக்கம், மே 28: கலசபாக்கம் ஒன்றியத்தில் கலசபாக்கம், மோட்டூர், தென் மகாதேவ மங்கலம், அருணகிரி மங்கலம், கோயில் மாதிமங்கலம், எலத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் கலந்துகொண்டு அப்பகுதியில் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது அங்கிருந்த பெண்கள் பெரும்பாலான பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை மாதந்தோறும் 15ம் தேதி வங்கிக் கணக்குகளில் நேரடியாக வருகிறது. ஒரு சிலருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லை. தகுதியான அனைவருக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெண்கள் எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்தனர்.
இதற்கு பதில் அளித்த எம்எல்ஏ விடுபட்ட பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நடைபெற உள்ள சிறப்பு முகாம்களில் பெண்கள் கொடுக்கும் மனுக்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள். அதேபோல் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தகுதியான நபர்களுக்கு கண்டிப்பாக வீடு வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலாளர்கள் சிவக்குமார், சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
The post கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விடுபட்ட பெண்களுக்கு விரைவில் கிடைக்கும்: கலசபாக்கம் எம்எல்ஏ உறுதி appeared first on Dinakaran.