சட்டப்பேரவையில் இன்று போலீஸ் மானியம் தாக்கல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார்

சென்னை: சட்டப்பேரவையில் இன்று போலீஸ் மானியம் தாக்கல் செய்யப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார். தமிழக சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2025-2026ம் ஆண்டுக்கான நிதி நிலை பட்ஜெட், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த மாதம் 24ம் தேதி முதல் துறை ரீதியான மானியக் கோரிக்கைள் மீது விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடைசியாக நேற்று முன்தினம் மாநில சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக்கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. விவாதத்திற்கு பதில் அளித்து அமைச்சர்கள் முறையே துரைமுருகன், தங்கம் தென்னரசு, மதிவேந்தன் ஆகியோர் புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர். தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சட்டப்பேரவைக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை இன்று காலை 9.30 மணிக்கு கூடுகிறது.
கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்து கொள்ளப்படும்.

உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். தொடர்ந்து துறைரீதியான மானியக்கோரிக்கை நடைபெறும். அதாவது காவல் (உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை), தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்ய உள்ளார். இந்த மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் சட்டப்பேரவையில் முன்வரிசையில் உள்ள தலைவர்கள் பேசுவார்கள். தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விவாதத்தில் பேசுவார். எதிர்க்கட்சி தலைவர் பேசி முடித்ததும் இன்றைய கூட்டம் நிறைவு பெறும்.
தொடர்ந்து நாளை காவல், தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுவார்.

தொடர்ந்து பல்வேறு அறிவுப்புகளை வெளியிடுவார். இதில் போலீசாருக்கான பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதன் பிறகு பொதுத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையிர் நலத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும். விவாதத்திற்கு பதில் அளித்து அமைச்சர் ஆவடி நாசர் புதிய அறிவுப்புகளை வெளியிடுவார். தொடர்ந்து அரசினர் சட்டமுன்வடிவுகள்-ஆய்வு செய்தலும் நிறைவேற்றுதலும், ஏனைய அரசினர் அலுவல்களும் நடைபெறும். இதைத் தொடர்ந்து சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் அப்பாவு ஒத்திவைப்பார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

 

The post சட்டப்பேரவையில் இன்று போலீஸ் மானியம் தாக்கல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் appeared first on Dinakaran.

Related Stories: