ஆர்.கே.பேட்டை, ஏப்.24: ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டம், கீழாண்ட மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வரதன்(47). இவர், நேற்று ஆர்.கே.பேட்டையில் உள்ள அவரது மருமகன் ரங்கநாதன் என்பவரது வீட்டில் கட்டிட வேலைக்கு சென்றார். அங்கு, தளம் அமைக்கும் பணி முடிந்ததும் குளித்துவிட்டு வீட்டிற்கு செல்வதாக மருமகனின் குடும்பத்தாரிடம் கூறிவிட்டு சென்றார். இதனிடையே, நேற்று காலை 11 மணியளவில் ஆர்.கே.பேட்டை ஒன்றியம், கொள்ளாபுரி அம்மன் கோயில் குளத்தில் ஆண் சடலம் கிடப்பதாக ஆர்.கே.பேட்டை போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சப் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் தண்ணீரில் இருந்து சடலத்தை மீட்டு விசாரித்ததில், மதுபோதையில் இருந்த வரதன் நீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இதையடுத்து, சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
The post கோயில் குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி appeared first on Dinakaran.