அச்சிறுப்பாக்கம் மலையடிவாரத்தில் மழைமலை மாதா கோயிலில் புனித வெள்ளி தினம் அனுசரிப்பு

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் மலைக்குன்றின் அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற மழைமலை மாதா கோயிலில் நேற்று புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்பட்டது. ஏராளமான கிறிஸ்தவ மக்கள் சிலுவைப் பாதை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கத்தில் உள்ள மலைக்குன்றின் அடிவாரத்தில் பிரசித்தி பெற்ற மழைமலை மாதா கோயிலில் நேற்று மாலை புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிலுவை பாதை வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் அருள்தள அதிபர் சின்னப்பர் சிலுவையை சுமந்து, சிலுவை பாதை வழிபாடுகளை துவக்கி வைத்தார். இதில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மக்கள் மழைமலை மாதாவை வணங்கிவிட்டு, சிலுவைகளை கையில் உயர்த்திப் பிடித்தபடி மலைக்குன்றின் உச்சியில் ஏறி, அங்கு இயேசுவின் பாடுகளையும், சிலுவையில் அனுபவித்த துன்பங்களையும் நினைவுகூர்ந்து ஜெபித்தனர்.

மேலும் இறை வழிபாடு, திருச்சிலுவை ஆராதனை, திருவிருந்து, இயேசுவின் உடலையும் ரத்தத்தையும் நினைவுகூறும் ஒரு சிறப்பு வழிபாடு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, புதுச்சேரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து தங்களின் குடும்பத்துடன் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்று வழிபாடுகளில் கலந்து கொண்டனர்.

The post அச்சிறுப்பாக்கம் மலையடிவாரத்தில் மழைமலை மாதா கோயிலில் புனித வெள்ளி தினம் அனுசரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: