‘யாரும் நன்கொடை அனுப்ப வேண்டாம்’ பரம்பொருள் அறக்கட்டளையை இழுத்து மூடினார் மகாவிஷ்ணு: ஆன்மிகத்தை விட்டு வெளியேறுகிறாரா?

திருப்பூர்: பரம்பொருள் அறக்கட்டளையை மூடுவதாக மகாவிஷ்ணு அறிவித்து உள்ளார். ஆன்மிக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு பரம்பொருள் அறக்கட்டளை என்ற பெயரில் திருப்பூரில் தலைமை அலுவலகம் வைத்து செயல்பட்டு வந்தார். இதுதவிர இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் கிளை அலுவலகங்களையும் வைத்து ஆன்மிக சொற்பொழிவு ஆற்றி வந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை அரசு பள்ளியில் நடந்த ஒரு சொற்பொழிவு நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் குறித்தும், முன்ஜென்ம பயன் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அவரை போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, திருப்பூரில் உள்ள அறக்கட்டளை அலுவலகம் மற்றும் அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். இதைத்தொடர்ந்து ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு தொடர்ந்து சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தி வந்தார். இந்நிலையில், தனது பரம்பொருள் அறக்கட்டளையை மூடுவதாக மகாவிஷ்ணு அறிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: என் உயிரும், உள்ளமும் கலந்த பரம்பொருள் அறக்கட்டளையை முடிவுக்கு கொண்டு வருகிறேன் என்ற இந்த வார்த்தைகளை எழுதும்போது, என் உள்ளத்தில் நிம்மதி மட்டுமே இருக்கிறது. இது வேதனை கொண்ட முடிவு அல்ல, என் சொந்த ஆன்மிக வளர்ச்சியை கருத்தில் கொண்டு எடுத்த ஒரு தெளிவான தீர்மானம். கடந்த பல வருடங்களாக பரம்பொருள் அறக்கட்டளை இறை அருளால் என் வழியாகப் பெரும்பாலும் இயற்கையாகவே உருவாகி, லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியது. அந்த மாற்றங்களின் பின்னால் நான் இல்லை; பரம்பொருள் (இறைவன்) மட்டுமே இருந்தது. அதற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இப்போது, நான் ஒரு புதிய புள்ளியை அடைந்திருக்கிறேன். என் உள்ளத்தின் மவுனம், அமைதி மற்றும் பரிபூரண நிலை என்னை எல்லா வெளியிலான கட்டமைப்புகளிலிருந்தும் விலகச் சொல்கிறது.

நான் ஒரு அமைப்பின் தலைவராக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை எனக் கருதுகிறேன். உண்மையான அருள் அமைப்பில்லாமலே இயங்குகிறது. அதனால், நான் எந்த ஒரு நெருக்கடியாலும் அல்லாமல், எந்த ஒரு வெளிப்பட்ட காரணத்தாலும் அல்லாமல், என் சொந்த ஆன்மிக வளர்ச்சிக்காக (சுயநலம் சார்ந்து), பரம்பொருள் அறக்கட்டளையை மூடுகிறேன். இனிமேல் பரம்பொருள் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கிற்கு எந்தவிதமான பணமும் அனுப்ப வேண்டாம். அந்த கட்டமைப்பு இனி இயங்காது. உங்கள் அன்பும், நம்பிக்கையும் நான் உள்ளத்தில் உணர்கிறேன்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

* அறக்கட்டளை இருந்த இடத்தை ரூ.5 கோடிக்கு வாங்கினாரா?
திருப்பூரில் ரூ.5 கோடி மதிப்பிலான 50 சென்ட் இடத்தில் பரம்பொருள் அறக்கட்டளை என்ற பெயரில் ஆசிரமத்தை மகாவிஷ்ணு அமைத்திருந்தார். கடந்த மாதம் மகாவிஷ்ணு வெளியிட்டு இருந்த வீடியோவில், ‘அறக்கட்டளை மையம் வாடகை இடத்தில் செயல்பட்டு வருகிறது. இதனை உரிமையாளர் குறைந்த விலைக்கு தருவதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். அந்த இடத்தை வாங்க முன்பணம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இதற்கு நன்கொடைகள் வழங்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்நிலையில், அந்த இடத்தை மகாவிஷ்ணு விலைக்கு வாங்கி விட்டதாக ஒரு உறுதி செய்யப்படாத தகவல் பரவி வருகிறது. அந்த இடத்தை மகாவிஷ்ணு தனது பெயருக்கு வாங்கி பத்திரப்பதிவு செய்த பின்பே அறக்கட்டளையை மூடியுள்ளாரா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

The post ‘யாரும் நன்கொடை அனுப்ப வேண்டாம்’ பரம்பொருள் அறக்கட்டளையை இழுத்து மூடினார் மகாவிஷ்ணு: ஆன்மிகத்தை விட்டு வெளியேறுகிறாரா? appeared first on Dinakaran.

Related Stories: