ஓடும் பேருந்தில் ஓட்டுநர் உயிரிழப்பு கண்டக்டரால் தப்பிய 40 பயணிகள்

பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநியில் இருந்து புதுக்கோட்டைக்கு தனியார் டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இதில் டிரைவராக பழநி அருகே கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பிரபு (30) பணிபுரிந்து வந்தார். கண்டக்டராக பழநி அருகே பச்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த விமல்குமார் (30) உள்ளார். பழநி பஸ் நிலையத்திலிருந்து, நேற்று காலை 10.30 மணிக்கு, புதுக்கோட்டை கிராமத்திற்கு பஸ் கிளம்பியது. பஸ்சை டிரைவர் பிரபு ஓட்டிச் சென்றார். பழநி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கணக்கன்பட்டி அருகே மாட்டுப்பாதை பகுதியில் பஸ் சென்றபோது டிரைவர் பிரபு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு, சீட்டிலேயே மயங்கிச் சரிந்தார். அருகில் இருந்து இதை கவனித்த கண்டக்டர் விமல்குமார் துரிதமாக டிரைவர் சீட் அருகே வந்து, உடனடியாக பிரேக் போட்டு பஸ்சை சாலையோரம் நிறுத்தினார். இதனால் பஸ்சில் இருந்த சுமார் 40க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர். இதையடுத்து, டிரைவர் பிரபுவை பழநி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சத்திரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஓடும் பேருந்தில் ஓட்டுநர் உயிரிழப்பு கண்டக்டரால் தப்பிய 40 பயணிகள் appeared first on Dinakaran.

Related Stories: