தாளவாடி மலைப்பகுதியில் பாட்டி, பேரன் அடித்துக்கொலை: உறவினர்கள் போராட்டம்

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தொட்டகாஜனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிக்கம்மா (55). இவரது மகள் தொட்டம்மா, மருமகன் மாதப்பா ஆகியோர் அருகில் உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். தம்பதிக்கு அமிர்தா (13), ராகவன் (11) ஆகிய மகன்கள் உள்ளனர். அமிர்தா அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கிறார். ராகவன் சூசையபுரம் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வந்தார். சிக்கம்மா நேற்று முன்தினம் இரவு தனது பேரன் ராகவனுடன் வீட்டில் படுத்து உறங்கினார்.

இந்நிலையில் நேற்று காலை இருவரும் அடித்துக்கொல்லப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். தகவல் அறிந்த தாளவாடி போலீசார் சென்று இருவரது சடலங்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர். அப்போது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொலையாளியை கைது செய்யாமல் உடலை எடுக்க விடமாட்டோம் என போராட்டம் நடத்தினர். இதையடுத்து நேற்று மதியம் ஈரோடு எஸ்பி சுஜாதா நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.

விரைவில் கொலையாளிகள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து இரு உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் கொலையாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த இரட்டைக்கொலை சம்பவம் தாளவாடி மலைப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post தாளவாடி மலைப்பகுதியில் பாட்டி, பேரன் அடித்துக்கொலை: உறவினர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: