1972ம் ஆண்டு எம்ஜிஆர் அதிமுக ெதாடங்கிய போதே அதன் உறுப்பினரான கருப்பசாமி பாண்டியன் 1977ம் ஆண்டு தேர்தலில் ஆலங்குளம் தொகுதியிலிருந்து அதிமுக எம்எல்ஏவாக தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், 1980ம் ஆண்டு தேர்தலில் பாளையங்கோட்டை தொகுதியிலிருந்து மீண்டும் வெற்றி பெற்றார். அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் மற்றும் பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோரால் 1972 முதல் பல்வேறு கட்சிப் பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டார். 1996ம் ஆண்டு கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக உயர்ந்தார்.
எனினும், 2000ம் ஆண்டு மே 2ம்தேதி ஜெயலலிதாவால் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து, கருப்பசாமி பாண்டியன் திமுகவில் இணைந்து தென்காசி எம்எல்ஏ, மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்தார். 2015ம் ஆண்டு மே மாதம் திமுகவிலிருந்து தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, 2016ம் ஆண்டு ஜூலை 26ம்தேதி ஜெயலலிதாவின் முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், டிசம்பர் 2016ல் சசிகலாவால் கட்சியின் அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.
பின்னர், சசிகலாவால் தினகரன் துணைத் தலைமைச் செயலாளராக அறிவிக்கப்பட்டபோது, அவருக்கு ஆதரவாக செயல்பட்டார். 2017ம் ஆண்டு எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் அமைப்பு செயலாளராக செயல்பட்டு வந்தார். கருப்பசாமி பாண்டியன் தமிழக அரசியலில் அதிமுக மற்றும் திமுக என இரு பெரும் கட்சிகளில் முக்கிய பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கருப்பசாமி பாண்டியனின் உடல் இன்று திருத்துவில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இதையொட்டி அவரது உடலுக்கு அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர், குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
* முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி இரங்கல்
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். கருப்பசாமி பாண்டியன் அவர்கள் 1977ல் ஆலங்குளம், 1980ல் பாளையங்கோட்டை, 2006ல் தென்காசி தொகுதிகளில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றியவர் ஆவார். நீண்டகாலம் அவையின் உறுப்பினராக இருந்த அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் உடனடியாக இரங்கல் தீர்மானம் கொண்டு வந்துள்ளோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அரசியல் இயக்கங்களைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார். இதேபோல் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
The post மாஜி எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் காலமானார் appeared first on Dinakaran.