குஜராத் அணிக்கு எதிராக பஞ்சாப் போராடி வெற்றி: ஷ்ரேயாஸ் 97 ரன் விளாசல்

அகமதாபாத்: ஐபிஎல் 18வது தொடரின் 5வது லீக் போட்டியில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 11 ரன் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது. ஐபிஎல் 18வது தொடரின் 5வது லீக் போட்டி, குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நேற்று குஜராத், பஞ்சாப் அணிகள் இடையே நடந்தது. டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. பஞ்சாப் அணியின் துவக்க வீரர்கள் பிரப்சிம்ரன் சிங், பிரியன்ஷ் ஆர்யா களமிறங்கினர்.

பிரப்சிம்ரன் 5 ரன், பிரியன்ஷ் ஆர்யா 47 ரன்னில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி காட்ட 9.1 ஓவரில் பஞ்சாப், 100 ரன்னை எட்டியது. 11வது ஓவரை வீசிய தமிழகத்தை சேர்ந்த சாய் கிஷோர், அஸ்மதுல்லா ஒமர்ஸாய்யும், கிளென் மேக்ஸ்வெல்லையும் அடுத்தடுத்த பந்துகளில் அவுட்டாக்கி பஞ்சாப் அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். தொடர்ந்து வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் 20 ரன்னில் வெளியேறினார். 20 ஓவர் முடிவில் பஞ்சாப், 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன் குவித்தது.

ஸ்ரேயாஸ் 97, சஷாங்க் சிங் 47 ரன் எடுத்து களத்தில் இருந்தனர். கடைசி ஓவரில் சஷாங்க 5 பவுண்டரி, 2 ரன் எடுத்தார். இதனால் கடைசி ஓவரில் ஸ்டிரைக் கிடைக்காததால் சதம் அடிக்க வாய்ப்பு ஸ்ரேயாசுக்கு பறிபோனது. குஜராத் தரப்பில் சாய் கிஷோர் 3, ரபாடா, ரஷித் கான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 244 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்கள் கேப்டன் சுப்மன் கில், சாய் சுதர்சன் ஆகியோர் அதிரடியாக விளையாடினர்.

5.5 ஓவரில் 61 ரன் எடுத்திருந்த நிலையில் கில் 33 ரன்னில் (14 பந்து, 3 சிக்சர், 2 பவுண்டரி) ஆட்டமிழந்தார். அடுத்த வந்த பல்டர், சாய் சுதர்சனுடன் ஜோடி சேர்ந்த அதிரடியாக விளையாடினார். சாய் சுதர்சன் 74 ரன்னிலும் (41 பந்து, 6 சிக்சர், 5 பவுண்டரி), பல்டர் 54 ரன்னிலும் (33 பந்து, 2 சிக்சர், 4 பவுண்டரி) வெளியேறினர். அடுத்த வந்த ஷெர்பேன் ரதர்ஃபோர்ட் 46 ரன்னில் (28 பந்து, 3 சிக்சர், 4 பவுண்டரி) அவுட்டாக குஜராத் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 232 ரன் எடுத்து 11 ரன்னில் தோல்வியடைந்தது.

The post குஜராத் அணிக்கு எதிராக பஞ்சாப் போராடி வெற்றி: ஷ்ரேயாஸ் 97 ரன் விளாசல் appeared first on Dinakaran.

Related Stories: