நடப்பாண்டு கோடை விழாவையொட்டி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி ஏற்பாடு பணிகள் மும்முரம்

கோத்தகிரி : கோத்தகிரி நேரு பூங்காவில் நடப்பாண்டு கோடை விழாவையொட்டி 2 நாட்கள் காய்கறி கண்காட்சி நடைபெற உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பூங்காவை கண்டு களிக்க தடை விதிக்கப்பட்டு, நுழைவு வாயில் பூட்டப்பட்டு பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.கோத்தகிரி நேரு பூங்கா கோடை விழாவிற்காக பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த பூங்காவில் மலர்த்தோட்டம், அழகிய புல்தரை, ரோஜா பூங்கா மற்றும் சிறுவர் விளையாட்டு பூங்கா ஆகியவைகளுடன் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் அமைத்துள்ளது. இந்த பூங்கா பேரூராட்சி நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

நேரு பூங்காவை ஒட்டி புகழ்பெற்ற காந்தி மைதானமும், பூங்கா வளாகத்திலேயே பழங்குடியின மக்களான கோத்தர் இன மக்களின் குல தெய்வமான பழமையான அய்னோர் அம்னோர் கோயில் அமைந்துள்ளது. நேரு பூங்காவிற்கு ஆண்டு முழுவதும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் வந்து பூங்காவை கண்டு களித்து செல்கின்றனர்.

எனவே நேரு பூங்கா கோத்தகிரி பகுதியில் முக்கிய சுற்றுலா தலமாக விளங்குவதுடன், குழந்தைகளின் பொழுதுபோக்கு அம்சமாக திகழ்கிறது.நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தோட்டக்கலைத்துறை சார்பில் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு கோடைவிழா வரும் மே மாதம் 3 ம் தேதி துவங்கி, 25 ம் தேதி வரை கோத்தகிரி, குன்னூர், ஊட்டி மற்றும் கூடலூரில் நடைபெற உள்ளது. கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரி நேரு பூங்காவில் மே 3 மற்றும் 4 ம் தேதி ஆகிய 2 நாட்கள் காய்கறி கண்காட்சி நடைபெற உள்ளது.

இந்த கண்காட்சியில் பல்வேறு மாவட்டங்கள் பங்கேற்று சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் காய்கறிகளை பயன்படுத்தி பிரமாண்ட சிற்பங்களை அமைக்க உள்ளனர்.

நேரு பூங்கா மற்றும் காய்கறி கண்காட்சியை கண்டு களிக்க ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவதை முன்னிட்டு பூங்காவை கோடை சீசனுக்குள் மேம்படுத்தி, தயார் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இதற்கான பணியில் பூங்கா ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு, சுற்றுலாப் பயணிகள் பூங்காவைக் கண்டுகளிக்க தடை விதிக்கப்பட்டு, நுழைவு வாயில் பூட்டி வைக்கப்பட்டு, பங்காவிற்குள் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கடந்த மாதம் கோடை சீசனுக்காக பல்வேறு ரகங்களை சேர்ந்த 30 ஆயிரம் மலர் நாற்றுகள் பூங்காவிற்கு கொண்டுவரப்பட்டு, மண்ணுடன் இயற்கை உரத்தை கலந்து நடவு செய்யப்பட்டது. மேலும் ரோஜா செடிகளில் கவாத்து செய்யும் பணி, புல் தரைகளை வெட்டி சமப்படுத்தி, பராமரிக்கும் பணி, சிறுவர் பூங்கா விளையாட்டு உபகரணங்களுக்கு வர்ணம் பூசும் பணி, மலர் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணி, நடைபாதைகள் மற்றும் செயற்கை நீரூற்றை பழுதுபார்க்கும் பணிகள் உள்ளிட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்து வரும் ஏப்ரல் மாத தொடக்கத்தில் மலர்கள் பூத்து குலுங்குவதுடன், காய்கறி கண்காட்சிக்கும் பூங்கா தயாராகி விடும் என பேரூராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post நடப்பாண்டு கோடை விழாவையொட்டி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி ஏற்பாடு பணிகள் மும்முரம் appeared first on Dinakaran.

Related Stories: